தமிழக தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு, பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எழுதிய முக்கிய கடிதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு இன்றுடன் (ஜூன் 30) பணி ஓய்வு பெற்றார். அரசு அதிகாரியாகவும் எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமானவர் இறையன்பு. பள்ளி மாணவர்கள் முதல் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வலர்கள் வரை அனைவரையும் எப்போதும் ஊக்கப்படுத்தி வருபவர். மாணவர்களை, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவரது பேச்சும் எழுத்தும் இருக்கும்.
இதையும் படியுங்கள்: ’சமுதாயம் என்னை எப்படி பயன்படுத்த விரும்புகிறதோ அதற்கேற்ப செயல்படுவேன்’: இறையன்பு
இந்தநிலையில், இன்றுடன் பணி ஓய்வு பெற்ற இறையன்பு, பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை முன்னெடுக்க பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளிக்கு இறையன்பு நேற்று (ஜூன் 29) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், மாணவர்கள் மின்னணு உபகரணங்களில் அதிகமாக வாசிப்பதால், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பொது அறிவு தொடர்பான செய்திகள் அவர்களுக்கு அதிகமாக தெரிவதில்லை என்ற தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இதைப் போக்க செய்ய வேண்டிய திட்டம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்த வேண்டும் என்றும், அதில் மாதந்தோறும் மாணவர்கள் படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இதன்மூலம் வாசிப்பு மேம்படுவதுடன் தகவல் தொடர்பிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். சிறந்த முறையில் நூலை மதிப்புரை செய்யும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதுடன், இதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல புத்தகங்களை தந்து ஊக்குவிக்கலாம். இது, அவர்களிடம் சமூகம் தொடர்பான சிந்தனைகளையும், ஆக்கபூர்வமான விழுமியங்களையும் ஏற்படுத்துவதால் இதை விரிவாகச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், என்றும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இறையன்பு இன்றுடன் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடைசியாக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கிய அறிவுறுத்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த அறிவுறுத்தல்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil