கள்ளச்சாராயத்தை தடுக்க சட்டம் கொண்டு வந்தும் அது முறையாக அமல்படுத்தப்படுகிறதா? இப்பிரச்சினையில் அரசு இயந்திரம் முறையாக செயல்படுகிறதா? உயர்நீதிமன்றம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த தீர்த்தக்கரையம்பட்டு கிராமத்தில், 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம், கள்ளச்சாராயம் குடித்து, 35 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக, கஸ்தூரி உள்பட 21 பேர் மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது இருவர் இறந்து விட்டதால், மீதமுள்ள 19 பேர் மீதான வழக்கை பொன்னேரி விரைவு நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் 82 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இவர்களில், 33 பேர் பல்டி அடித்தனர். இந்த வழக்கை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத்தரப்பு தவறி விட்டதாகக் கூறி, குற்றம்சாட்டப்பட்ட 19 பேரையும் விடுதலை செய்து பொன்னேரி விரைவு நீதிமன்றம் 2011ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மாதவரம் டி.எஸ்.பி., சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை, குற்றத்துடன் தொடர்புபடுத்துவதற்கு எந்த ஆதாரங்களையும் அரசுத்தரப்பில் தாக்கல் செய்யாத காரணத்தால், விசாரணை நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது. கொடுங்குற்றமாக இருந்தால் மட்டும் போதாது. அது நிரூபிக்கப்பட வேண்டும். இந்த வழக்கை அரசுத்தரப்பு நிரூபிக்கத் தவறி விட்டதால், துரதிருஷ்டவசமாக விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் பலியானது குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி, கள்ளச்சாராயத்தை தடுக்க சட்டம் கொண்டு வந்தும் அது முறையாக அமல்படுத்தப்படுகிறதா? அரசு இயந்திரம் முறையாக செயல்படுகிறதா? அரசு இயந்திரம் முறையாக செயல்படுகிறதா என நீதிபதி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மேலும், சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், தங்கள் கவனக்குறைவை உணர்ந்து மனசாட்சியிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும்தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.