நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வெள்ளம் போல் தேங்கி கிடக்கிறது. தலைமை செயலாளர் உட்பட 4 அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனை அங்காடி வளாகம் கட்டுவதற்காக சோமு உடப்ட 12 பேரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. என்ன காரணத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அதற்கு பயன்படுத்தாமல் உள்ள நிலத்தை திருப்பி அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சோமு உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு நிலத்தை திருப்பி அளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மற்றும் சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை அடுத்து நிலத்தை திருப்பி அளிக்காததால் வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறையின் அப்போதைய செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் விஜய ராஜ்குமார் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. கடந்த அக்டோபர் 12ம் தேதி விசாரணைக்கு வந்த போது 3 வாரங்களில் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து நவம்பர் 6க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு இடம் இல்லை எனவும் மாற்று இடம் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்துமா என்று அரசை எதிர்பார்த்து கொண்டிருக்க முடியாது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் மக்கள் நீதிதுறையின் மீது நம்பிக்கை இழந்து, வேறு வழியை நாடக்கூடும். சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்குகள் வெள்ளம் போல் திரண்டு கிடப்பது தலைமை செயலாளருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் நாளை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். மேலும் அப்போதைய வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பட்ட துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மற்றும் தற்போதைய செயலாளர் கிருஷ்ணன், சி.எம்.டி.ஏ.உறுப்பினர் செயலர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். பின்னர் வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளிவைத்தனர்.