திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தை வணிக வளாகத்திற்கு காந்தி சந்தையை இடமாற்றுவது தொடர்பாக கடை உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தலைமையில், மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் இன்று (29.06.2024) நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்; திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமைக்கப்பட உள்ள காய்கறி மார்க்கெட் குறித்து வியாபாரிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அவர்களுடைய கருத்துக்களையும் கேட்டு மாவட்ட நிர்வாகம் முடிவுகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு பழக்கடை, பூக்கடை உள்ளிட அனைத்து வியாபாரிகளும் வருகை தந்தனர். தற்போது நடைபெற்ற கூட்டத்தில் அவர்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இப்போது நடைபெற்றது முதல் கூட்டம். ஏற்கனவே இருக்கக்கூடிய கடைகளில் பரப்பளவு குறைவாக உள்ளது. அதனால் புதிதாக கட்டக்கூடிய மார்க்கெட்டில் பரப்பளவு அதிகப்படுத்த வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகளையும் தெரிவித்துள்ளனர். அது குறித்த மாவட்ட நிர்வாகம் நல்ல முடிவு எடுக்கும். தற்போது உள்ள மார்க்கெட்டில் இருந்து சில்லரை மட்டும் மொத்த வியாபாரங்கள் மாற்றப்படுவது குறித்து வியாபாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஆய்வின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். மேலும் வியாபாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்பட்டு எடுக்கப்படும்.
ரூ.256 கோடி மதிப்பீட்டில் 860 கடைகள் உள்ளடக்கி மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் ஆக புதிய மார்க்கெட் அமைக்கப்படும். தற்பொழுது செயல்பட்டு வரும் காந்தி மார்க்கெட் மற்றும் தனியாக செயல்பட்டு வரும் உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி மண்டி ஆகியவை தற்போது புதிதாக கட்டப்பட உள்ள காந்தி மார்க்கெட் உடன் இணைத்து செயல்படுவதற்கும் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது.
மேலும், காந்தி மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் தரைக் கடைகளையும் கணக்கு எடுக்கப்பட்டு புதிய மார்க்கெட்டில் அவர்களுக்கான தனி இடம் ஒதுக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
கட்டப்பட உள்ள புதிய மார்கெட்டில் நான்கு வழிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
காந்தி மார்க்கெட் பகுதிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு தரைக்கடைகள் காரணமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கணக்கெடுப்பை முழுமையாக முடித்த பிறகு அரசின் எண்ணம் போல் ஒருவருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மிக கவனமாக இருக்கும்.
புதிய காந்தி மார்க்கெட் கட்டுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. வியாபாரிகளின் கருத்து கேட்கப்பட்டு இடத்தை நேரில் ஆய்வு செய்த பிறகு அடுத்த முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக, திருச்சி காந்தி மார்க்கெட்டில் இயங்கி வந்த மொத்த காய்கறி, கனி, பூ விற்பனை ஆகியவற்றை போக்குவரத்து நெரிசல் காரணமாக, திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கள்ளிக்குடியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ. 77 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட்டிற்கு மற்ற கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முயற்சிகள் மேற்கொண்ட போது கடும் போராட்டங்கள் வெடித்தது, தற்போதும் கள்ளிக்குடியில் காந்தி மார்க்கெட்டுக்கு மாற்றாக கட்டப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட் பயணற்று கிடப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“