கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் பயிற்சிக்காக சென்றார். ஆனால் அவர் திடீரென அந்த மையத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் அவர் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக சில அமைப்புகள் ஈஷா யோகா மையம் மீது குற்றச்சாட்டுகள் கூறி வருகின்றன.
இந்த நிலையில் சுபஸ்ரீ மரண தொடர்பான வழக்கு குறித்து ஈஷா யோகா மையம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சில அமைப்புகள் சுய லாபத்திற்காக அரசியலாக்க முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், “சுபஸ்ரீயின் மரணம் துரதிஷ்டவசமானது. யாரும் எதிர்பாராத இந்த துயர சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவித கருத்துக்களையும் வெளியிட கூடாது என்பதற்காகவே இத்தனை நாட்கள் அமைதி காத்தோம். நாங்கள் சுபஸ்ரீ வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் போலீசாருக்கு முறையாக வழங்கி உள்ளோம்.
மக்கள் ஆதரவு இல்லாத சில உதிரி அமைப்புகள் இதனை தங்கள் சுய லாபத்திற்காக அரசியலாக்க முயற்சி செய்து வருகிறார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக சிலர் வதந்திகள் மற்றும் அவதூறுகளை வெளியிட்டு வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வன்மமான அவதூறுகள் மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தை பரப்பும் நபர்கள், இயக்கங்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழிப்புணர்வான உலகத்தை உருவாக்கும் எங்கள் நோக்கத்தையும், உறுதியையும் எவராலும் களைத்து விடமுடியாது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை