இந்தியா முழுமைக்கும் தீவிரவாதச் செயல்பாடுகளை விசாரணை செய்யும் தேசியப் புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ (NIA), கோவை பகுதியில் 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இருவர் மீதும் கடந்த 2023-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். -க்கு ஆட்கள் சேர்க்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி நடந்தது. இந்த கார்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு 14 பேரை கைது செய்துள்ளனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் மேற்கொண்ட விசாரணையின்போது, கோவை குனியமுத்தூர் அரபிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு அனுப்ப முயன்றது தெரிய வந்தது. இது தொடர்பாக தனியாக ஒரு வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் ஜமீல் பாஷா, முகமது உசேன் இஸ்ரத், சையது அப்துல் ரகுமான் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக ஜவஹர் சாதிக், அகமது அலி என்ற இருவரை பிடித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் இந்த விசாரணையானது நடைபெற்று வந்தது. விசாரணைக்குப் பின்னர் இருவரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அகமது அலி கோவை அரபிக் கல்லூரியின் முதல்வராக இருந்து வருகிறார்.ஜவகர் சாதிக் அரபிக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரையும் இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளனர். இதே போல திருச்சியில் அரபு கல்லூரியை நிர்வகித்து வரும் ஷேக் தாவூத் என்பவரையும், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராஜா அப்துல்லா என்பவரையும் இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்துள்ளனர். விசாரணையின் பின்னணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்த பின்னரே கைது குறித்தான முழு தகவல்கள் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.