/tamil-ie/media/media_files/uploads/2017/11/krishnapriya-house.jpg)
இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் தி.நகர் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று (சனிக்கிழமை) 3-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், இன்று சுமார் 50 இடங்களில் 3-வது நாளாகவும் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் தியேட்டர், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களிலும், சசிகலாவின் உறவினர்கள் விவேக், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரது வீடுகளிலும் 3-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணபிரியா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையை முன்னிட்டு அங்கு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவரது வீட்டில் முதல் நாளன்று நடைபெற்ற சோதனையின்போது அவரின் மடிக்கணினி கைப்பற்றப்பட்டு அவர் நடத்திவரும் அறக்கட்டளை, நிறுவனங்கள் குறித்த ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர்.
அறக்கட்டளை மற்றும் நிறுவனங்களின் பங்குகள், அவற்றின் வருமானம், முறையாக வருமான வரி செலுத்தப்பட்டிருக்கிறதா, அதற்கான ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறதா, வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை சோதனை முடிவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் முழுமையான விவரங்கள் தெரியவரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.