வரி ஏய்ப்பு தொடர்பாக கோவையில் ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனம் மற்றும் தொழில் அதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2-ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மொத்தம் 6 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது.
ஈரோட்டைச் சேர்ந்த சதாசிவம் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து நடத்தும் காளப்பட்டி பகுதியில் உள்ள கிரீன் பீல்ட் கட்டிட கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம், பட்டணம் பகுதியில் உள்ள ரியல் வேல்யூ லேண்ட் ப்ரொமோட்டர்ஸ் உரிமையாளரான ராமநாதன் தங்கியுள்ள ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் உள்ள இல்லம் மற்றும் அலுவலகம், அவரது மகன் சொர்ண கார்த்திக் தங்கியுள்ள சூலூர் ரூபி கார்டன் பகுதியில் உள்ள வீடு, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் வேலையாட்கள் தங்கி உள்ள நாயக்கன்பாளையம் ராமலிங்கம் நகர் பகுதியில் உள்ள வீடு, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள எல்லன் பம்ப் நிறுவன மேலாண் இயக்குனர் விக்னேஷ் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 5 இடங்களில் சோதனை நிறைவு பெற்றது.
குறிப்பாக கோவை பட்டணம் புதூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராமநாதன் அலுவலகம்,வீடு மற்றும் அவரது மகன் சொர்ண கார்த்திக் இல்லம், பணியாளர்கள் தங்கும் அறை ஆகிய 4 இடங்களில் 3 நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்ததில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் ராமநாதன் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் கூறப்படுகின்றது.
காளப்பட்டியில் உள்ள கிரீன் பீல்ட் கட்டிட கட்டுமான நிறுவனத்தில் மட்டும் சோதனை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“