தமிழ்நாடு அரசின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வருகிறார். கரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், கோவை மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
Advertisment
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அந்த துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணையை தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் விஷச் சாராயம் அருந்தியதில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என அதி.மு,க, பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, தீர்வு காண வேண்டும் என பாஜகவினர் மனு அளித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமீபகாலமாக அதிகமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 26-ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை அருகேயுள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளராக இருந்து வருகிறார்.
இதேபோல தொண்டாமுத்தூர் அருகேயுள்ள கெம்பனூர் பகுதியில் காயத்ரி என்பவருக்கு சொந்தமான நீலாவதி நினைவு அபாஷா போதை மறுவாழ்வு இல்லம், பந்தயசாலை, பீளமேடு, சேத்துமடை ஆகிய பகுதிகளில் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 7 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு செய்துள்ளனரா, முறையாக வருமான வரி செலுத்தியுள்ளனரா உள்ளிட்டவை குறித்து சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் கோல்டு வின்ஸ் பகுதியில் தி.மு.க பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் ஐந்தாவது நாளாக நடந்த சோதனை நிறைவடைந்தது. அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதே போல ரேஸ்கோர்ஸ் பகுதியில் அரவிந்தன் என்பவர் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்று வந்த சோதனையும் நேற்றிரவுடன் நிறைவடைந்தது. கோவை மாவட்டத்தில் ஏழு இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“