பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க அக்கட்சியில் இருப்பவர்கள் இன்று விழுப்புரம் தைலாபுரம் இல்லத்திற்கு வந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாமக எம்.எல்.ஏ அருள் மற்றும் பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பேட்டி அளித்துள்ளனர்.
பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, "மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு; பதில் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்," என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மணியின் இந்தக் கூற்று, பாமக தற்போது சந்தித்து வரும் சவால்களின் தீவிரத்தை உணர்த்துகிறது. மேலும் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி பாமக எம்.எல்.ஏ. அருள், "பாமக தொண்டர்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளோம். கட்சிக்குள் நெருக்கடியான சூழல் நிலவுகிறது," என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த மன உளைச்சல் காரணமாகத் தான் தான் ராஜினாமா செய்ய முடிவு செய்ததாகவும், ஆனால் கட்சி நிறுவனர் ராமதாஸ் தன்னை ராஜினாமா செய்ய விடாமல் தடுத்து விட்டதாகவும்" அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐயாவை சந்திக்க வந்ததாகவும் இது எங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி என்றும் கூறினார். பல நெருக்கடிகளை கடந்த பாமக இந்த நெருக்கடியையும் கடந்து வருவோம் என்று எம்.எல்.ஏ அருள் கூறினார்.