கோவை பேரூர் பகுதியில் உள்ள சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ் கல்லூரியில் நிமிர்வு கலையகம் மற்றும் பேரூர் ஆதின கல்வி நிறுவனங்கள் இணைந்து உலகப்பொது பறை மாநாடு நடைபெற்றது. இன்று(ஜுன் 18) ஒரு நாள் நடைபெறும் இந்த பறை மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொல்லிசை கருவிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Advertisment
அதுமட்டுமின்றி இந்நிகழ்வில் பறை நூல்கள் வெளியீடு, 1330 திருக்குறள் பறைப் படை நிகழ்ச்சி, கருத்தரங்கு நிகழ்ச்சி, நாட்டார் கலை நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த மாநாட்டை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பறை இசைத்து தொடங்கி வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்த அமைச்சர், தொல்லிசை கருவிகள் கண்காட்சியை பார்வையிட்டு பல்வேறு இசைக்கருவிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள சில கருவிகளையும் இசைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், தமிழர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பல்லாயிரம் ஆண்டுகளாக இசையை வளர்த்துள்ளார்கள். பறை போன்ற இசைக் கருவிகளை கொண்டு தான் மன்னர்களே, பொது மக்களுக்கு பறையடித்து செய்திகளை வெளிப்படுத்தி உள்ளார்கள். அக்காலத்தில் கோவில் நிகழ்ச்சிகளிலும் சுப நிகழ்ச்சிகளிலும் இக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற நமது கலாச்சாரம் கலை பண்பாடுகளை மீட்டெடுக்க வேண்டியது தான் நம்முடைய தலையாய கடமையாக உள்ளது. அதற்கான முன்னெடுப்பை முதலமைச்சர் சிறப்பாக செய்து வருகிறார்.
அது தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் தமிழ் வளர்ச்சித் துறையை உருவாக்கி செம்மைப்படுத்தியுள்ளார். அவரது வழியில் முதலமைச்சர் அதற்கான வழிகாட்டுதலை வழங்கி வருகிறார். இது போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் நடத்தப்பட வேண்டும். பண்டைய காலத்தில் தமிழர்களிடமிருந்த இசைக் கருவிகள், பண்பாடு கலாச்சாரம் ஆகியவை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் பகுதி நேர வகுப்புகள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், இது குறித்து அதிகாரிகளுடன் கலந்தலோசித்து, பகுதி நேர வகுப்புகள் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். மாநாடு துவக்க விழா நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் உட்பட தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இன்று மாலை 3:30 மணியளவில் நடைபெறும் திருக்குறள் பறைப்படை நிகழ்ச்சியில் 1330 பறை இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் பறை இசைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“