ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று மே 6-ம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில், அமைச்சரவை மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
ஜாமினா? அமைச்சர் பதவியா? என உச்சநீதிமன்றம் கெடு விதித்த நிலையில், செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல, சைவம்-வைணவம் குறித்த அவதூறு பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது விமர்சனம் எழுந்த நிலையில், பொன்முடி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பொன்முடியின் பேச்சு குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் கண்டனம் தெரிவித்திருந்தார். நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார். அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று கண்டனக்குரல் ஒலித்தன. இதனால் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. முதல்வா் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநா் ஆா்.என்.ரவி, அமைச்சரவையில் மாற்றத்துக்கும் ஒப்புதலை அளித்தாா்.
இந்நிலையில், கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை கிளம்பினார். அப்போது, தி.மு.க அமைச்சர்கள் பதவி பறிப்பு தொடர்பான கேள்விக்கு அது முதல்வரின் முடிவு எனக்கூறிவிட்டு வேகமாக கிளம்பினார். நீதிமன்ற உத்தரவால் செந்தில் பாலாஜி பதவி பறிக்கப்படதா என்ற கேள்விக்கு பதில் கூற அவர் மறுத்துவிட்டார்.