DMK MLA J Anbazhagan: கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதே போல் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை வட்டாரத்தில் இன்று கூறுகையில், ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டனர்.
அன்பழகன், திமுக.வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார். திமுக செயற்குழு அல்லது பொதுக்குழு கூட்டங்களில் தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி பேசுபவர் என்கிற பெயர் இவருக்கு உண்டு. கலைஞர் இருந்த காலகட்டங்களில் அவரது குரலாகவும் ஒலித்தவர்.
அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3 இந்தத் தகவல் வெளியே தெரியவந்தது. சென்னை குரோம்பேட்டையில் பிரபல தனியார் மருத்துவமனையான டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் அன்ட் மெடிக்கல் சென்டரில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஜெ.அன்பழகனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் நேற்று (ஜூன் 4) மாலையில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது.. ‘61 வயதான ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஜூன் 2-ம் தேதி குரோம்பேட்டை டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் அன்ட் மெடிக்கல் சென்டரில் கோவிட் 19 சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தீவிரமான சுவாசப் பிரச்னை மற்றும் பிசிஆர் பரிசோதனையில் கோவிட் 19 பாசிட்டிவ் என்ற நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
ஜெ.அன்பழகன் மருத்துவ ரிப்போர்ட்
முதலில் ஃபேஸ்மாஸ்க் மூலமாக ஆக்சிஸன் தெரபி வழங்கப்பட்டது. சுவாசப் பிரச்னை மேலும் மோசமானதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 80 சதவிகித ஆக்சிஜனை வென்டிலேட்டர் உதவியுடன் பெறுகிறார். கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலை மாற்றமின்றி இருக்கிறது’. இவ்வாறு மருத்துவமனை சி.இ.ஓ இளங்குமரன் கலியமூர்த்தி கூறியிருக்கிறார்.
சென்னை திமுக.வில் இரும்பு மனிதராக அறியப்படுகிறவர் ஜெ.அன்பழகன். திமுக நடத்தும் போராட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகளை செய்வது முதல், அரசுக்கு எதிராக வழக்குகள் தொடுப்பது, சட்டமன்றத்தில் அதிரடியாக செயல்படுவது என எப்போதும் டாபிக்கில் இருக்கிறவர் அவர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது உடன்பிறப்புகளை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை வட்டாரத்தில் இன்று கூறுகையில், ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டனர். வென்டிலேட்டர் உதவியுடன் 80 சதவிகித ஆக்சிஜன் சுவாசித்து வந்த அவர், இன்று 67 சதவிகித ஆக்சிஜனை வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசிப்பதாக கூறப்பட்டது. எனினும் அதிகாரபூர்வ மருத்துவ அறிக்கை வெளியாகவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"