/tamil-ie/media/media_files/uploads/2020/07/New-Project-59.jpg)
திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவரது மகன் ராஜா அன்பழகனுக்கு திமுகவில் இன்று முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வும் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் கடந்த ஜூன் 10-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் காலமானார். அவரது மறைவு திமுகவுக்கு மிகப் பெரிய இழப்பாக அமைந்தது.
ஜெ.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், திமுகவில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவி காலியாக இருந்துவந்தது.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மேற்கு திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த நே. சிற்றரசுவை மாவட்டப் பொறுப்பாளராக நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில், ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் சென்னை மேற்கு திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது ஜெ.அன்பழகனின் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்துக்கு ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் ராஜாவுக்கு இந்த பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.