பொங்கல் பரிசுக்கான கரும்பை கொள்முதல் செய்வது தொடர்பாக கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசிகுடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் முழு கரும்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து, கரும்பு கொள்முதலுக்கு நிதி ஒதுக்கியும், கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய, அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு வேளாண் இணை இயக்குநர், கூட்டுறவு இணைப்பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர், வேளாண் விற்பனை துணை இயக்குநர், பொதுவிநியோக துணை பதிவாளர், மண்டல போக்குவரத்து அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் சென்னையை பொறுத்தவரை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், உணவுத்துறை உதவி ஆணையர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கரும்புக்கு உண்டான தொகை அதிகபட்சமாக போக்குவரத்து செலவுகள் உட்பட ஒரு கரும்புக்கு ரூ.33 வீதம் , ரூ.72.38கோடி நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நியாயமான விலையில் தரமான கரும்பை பொங்கல் தொகுப்புடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் இடைத்தரகர்கள், வியாபாரிகள், பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசுக்கான கரும்பு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வது தொடர்பாக கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் செம்பதனிருப்பு இடத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/