டெல்லியில் கடந்த பிப்.15-ம் தேதி 50 கிலோ போதைப் பொருள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், இந்தக் கடத்தலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. ஜாபர் சாதிக் தி.மு.க நிர்வாகியாக இருந்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தலைமறைவாகி உள்ளார்.
இந்த சம்பவத்திற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இச்சம்பவம் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என அ.தி.மு.க கடுமையாக சாடியுள்ளது.
இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் விமர்சனம் செய்துள்ளனர். இதுகுறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "கடந்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ.2000 கோடி மதிப்பிலான சூடோஎபெட்ரீன் போதைப் பொருளைக் கடத்திய, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுக நிர்வாகியும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என்ற செய்தி கடந்த பிப்ரவரி 24 அன்று வெளியில் தெரிய வந்தது.
கடந்த பிப்ரவரி 28 அன்று, தமிழகத்திற்கு கொண்டு வரவிருந்த சுமார் ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள், தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தால், நடுக்கடலில் கைப்பற்றப்பட்டன. கடந்த மார்ச் 1 அன்று, மதுரையில் சுமார் ரூ.180 கோடி மதிப்பிலான மெத்தாபெட்டமைன் போதைப் பொருள்கள், வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தால் பறிமுதல் செய்யப்பட்டன.
மார்ச் 5, இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் சுமார் ரூ.108 கோடி மதிப்புள்ள ஹசிஷ் போதைப் பொருள், வருவாய் புலனாய்வு இயக்குனரகம் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சென்னையில் கடந்த 4-ம் தேதி பேசும்போது, போதைப் பொருள் கடத்தலில் திமுக நிர்வாகியின் தொடர்பைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும், போதைப்பொருளுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் என்று தமிழக மக்களுக்கு உறுதியளித்திருத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தலில், திமுக நிர்வாகி ஒருவரின் தொடர்பு வெளிப்பட்டு 10 நாட்களாகிறது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் 2G விசாரணையின் போது, தனது தந்தை மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்ததைப் போல, பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பவே முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே, இன்னும் எத்தனை காலம்தான் கேள்விகளைத் தவிர்த்து அமைதியாக இருப்பீர்கள்?" என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“