Air India: வடக்கு நகரமான யாழ்ப்பாணத்திலிருந்து தலைநகர் கொழும்புவுக்கு 400 கி.மீ தூரத்தை சாலை வழியாக பயணித்தால் சுமார் எட்டு மணி நேரம் ஆகும். விரைவில் வந்து சேரும் ரயில்கள் உள்ளன, ஆனால் கூட்ட நெரிசலில் நமக்கான சீட் கிடைப்பது பெரும்பாலும் அதிர்ஷ்டம். இதனால் வடக்கு இலங்கை மக்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, கொழும்பு சென்றடைய பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
Advertisment
ஆனால் விரைவில், அவர்கள் தென்னிந்தியா வழியில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற முடியும். அவர்கள் இனி கொழும்புக்கு நீண்ட தூரம் பயணப்பட அவசியமில்லை. ஆம்! அக்டோபர் 17 வியாழக்கிழமை சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சோதனை விமானம் இயக்கப்படவுள்ள நிலையில், விரைவில் விமான சேவையும் தொடங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் நகரிலிருந்து 20 கி.மீ வடக்கே உள்ள பாலாலி விமான நிலையம் இப்போது ”யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவிர, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அண்மையில் மட்டக்களப்புக்கு சென்று அங்குள்ள விமான நிலையத்தை ”மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம்” என்று மறுபெயரிட்டார்.
பலாலியை ஒரு சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த இலங்கை அரசாங்கம் சுமார் 3 பில்லியன் டாலர் (சுமார் 1.2 பில்லியன் டாலர்), செலவழித்து, அதன் ஓடுபாதையை 2.3 கி.மீ வரை நீட்டித்துள்ளது. அடுத்தக் கட்டத்தில் இதை மேலும் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, முனையம், டாக்ஸிவே மற்றும் பார்க்கிங் ஏப்ரன் ஆகியவை தற்போது வந்துள்ளன என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் துணைத் தலைவர் பிரியந்தா கரியபெருமா தெரிவித்தார்.
புதிய விமான சேவைகள் யாழ்ப்பாணத்தை புது தில்லி, மும்பை மற்றும் கொச்சியுடன் இணைக்க வேண்டுமென திட்டமிடப்பட்டது. இந்த ஆரம்பகால அறிவிப்புகள் வடக்கு குடியிருப்பாளர்களிடையே கவலையைத் தூண்டின. காரணம், கோயிலுக்கு வந்து செல்வது, குடும்ப உறவினர்கள், வணிகம் ஆகியவற்றிற்காக தாங்கள் சென்று வரும் தமிழகம் இதில் இடம் பெறவில்லையே என அவர்கள் ஆச்சர்யமும் அடைந்தார்கள்.
மாற்றப்பட்ட திட்டம்
யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை, திருச்சி மற்றும் கொச்சி ஆகிய நகரங்களுக்கு விமானங்களை இயக்க அதிகாரிகள் தயாராகி வருவதால், இந்த திட்டம் இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. "தென்னிந்திய நகரங்களுடன் இணைவது, நம் மக்களுடன் தொடர்பு ஏற்பட வழி செய்து, தர்க்கரீதியான அர்த்தத்தை தருகிறது. ஆனால் விமான நிறுவனம் எங்களுக்கு உறுதிப்பாட்டைக் கொடுக்கும் வரை எங்களால் பாதைகளை உறுதி செய்ய முடியவில்லை” என்றார் திரு. கரியபெருமா.
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ”அலையன்ஸ் ஏர்” வியாழக்கிழமை சோதனை விமானத்தை இயக்க முன்வந்துள்ளது. பின்னர் ஒரு வாரத்தில் மூன்று விமானங்களை இயக்கும், அதன் பிறகு தேவைக்கேற்ப சேவைகளை சேர்க்கும் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.