சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜனார்தனனை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனார்த்தனன், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பால் வளத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 57 லட்சம் சொத்து சேர்த்ததாக ஜனார்த்தனன் மற்றும் அவரது மனைவி பிரேமா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம் ஜனார்த்தனனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை 50,000 அபராதமும் அவரது மனைவி பிரேமாவை வழக்கிலிருந்து விடுவித்தும் கடந்த 2005ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
சிறை தண்டனையை எதிர்த்து ஜனார்த்தனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதேபோல், தன்னுடைய பெயரில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து பிரேமாவும் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், ஜனார்த்தனனுடைய விவசாய சொத்துக்கள் மூலம் கிடைத்த வருமானத்தை கணக்கில் எடுத்து கொள்ளாமல் கடலூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதேபோல், பிரேமாவின் சொத்துக்கள் முடக்க வேண்டும் என்ற உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பளித்தார்.