மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த மலர் சந்தைக்கு மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அலங்காநல்லூர், பாலமேடு, உசிலம்பட்டி, ஆவியூர், நெடுங்குளம், வலையங்குளம், திருமங்கலம், சிலைமான், மேலூர், கொட்டாம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலிருந்தும், அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இவற்றில் மதுரைக்கே சிறப்பான சேர்க்கும் மல்லிகை பூக்களுக்கு எப்போதும் தனிச்சந்தை உள்ளது. மணம், தன்மை, தரம் காரணமாக மதுரை மல்லிகைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீட்டு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால், மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கும் மதுரையிலிருந்து டன் கணக்கில் மல்லிகைப்பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது. நேற்று தேரோட்டம் நடைபெற்ற நிலையில், மல்லிகைப் பூ கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனை ஆனது. பிச்சி கிலோ ரூ.600, முல்லை கிலோ ரூ.500, செவ்வந்தி கிலோ ரூ.200, சம்பங்கி கிலோ ரூ.100, செண்டு மல்லி கிலோ ரூ.50, கனகாம்பரம் கிலோ ரூ.500, ரோஸ் கிலோ ரூ.180, பட்டன் ரோஸ் கிலோ ரூ.160, பன்னீர் ரோஸ் கிலோ ரூ.300, கோழிக்கொண்டை கிலோ ரூ.80, அரளி கிலோ ரூ.200, மரிக்கொழுந்து கிலோ ரூ.60, தாமரை (ஒன்றுக்கு) ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டன.
கடந்த வாரத்தை காட்டிலும் பூக்களின் வரத்து குறைவாக உள்ளதாலும் தற்போது சித்திரைத் திருவிழா காலம் என்பதாலும் பூக்களின் விலை சற்று கூடுதலாக உள்ளது. இன்னும் 3 நாட்களுக்கு இதே விலை நீடிக்க வாய்ப்புள்ளது என்று மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கப் பொருளாளர் முருகன் தெரிவித்தார்.