தமிழகத்தில் நேற்று புதிதாக 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 15512 ஆக உயர்ந்தது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 103-க அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது.
தீவிர நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், சென்னையில் நாளுக்கு நாள் கொரோன வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 9,989 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மூர் சந்தை வளாகத்திற்குப் பின்புறம் அமைந்துள்ள நேரு உள் விளையாட்டு அரங்கம் 600 படுக்கைகள் கொண்ட கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
மேலும், வரும் நாட்களில் ரயில், விமான வழி பயணங்கள் நாடு முழுவதும் தொடங்கப்படுவதால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, போதுமான கொரோனா சிறப்பு வார்டுகளை உருவாக்குவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கொரோனா முதல்நிலை பாசிட்டிவ் உள்ளவர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கில் தங்க வைக்கப் படுவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமலில் உள்ள முடக்கநிலை காலம் 2020 மே 31 தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. அது குறித்த வழிகாட்டுதல்களில், “விளையாட்டு வளாகங்கள் மற்றும் மைதானங்கள் திறக்க அனுமதிக்கப்படும்; இருப்பினும், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்,” என்று கூறப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil