முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பான ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாத காலம் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் 2016, டிச.5 அன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகம் எழுப்பினர். ஓபிஎஸ் சந்தேகம் எழுப்பி வந்த நிலையில், அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை கடந்த ஆண்டு செப்.25-ல் தமிழக அரசு வெளியிட்டது. விசாரணை ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார். இரண்டு மாத காலத்தில் விசாரணையை முடிக்க ஆணையத்துக்கு பணிக்கப்பட்டது.
இந்த நிலையில், சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள ஜெயலலிதா விசாரணை ஆணையத்திற்கான அலுவலகத்தில் நவம்பர் 22-ம் தேதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்கினார். இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினா்கள், முன்னாள் தலைமைச் செயலாளா்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு மருத்துவா்கள், ஜெயலலிதாவின் உதவியாளா்கள் என பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் டிசம்பா் 24ம் தேதியில் இருந்து 6 மாத காலத்திற்கு, அதாவது 2018 ஜூன் மாதம் வரை காவல அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்தநிலையில், ஜெயலலிதா மரணம் தொடா்பாக மேலும் பலரை விசாரிக்க வேண்டி உள்ளதால் ஜூன் 24ம் தேதியில் இருந்து மேலும் 6 மாத காலத்திற்கு விசாரணை காலத்தை நீட்டிக்க வேண்டும் என ஆணையம் சாா்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடா்ந்து விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 4 மாத அவகாசம் வழங்கி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.