ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளி தாக்கல் செய்வதற்கான காலம் நீட்டிக்கபட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு 43.63 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக சென்னை பொதுப்பணித்துறை கடந்த ஜனவரி 18 ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பை வெளியிட்டது. அதில், ‘பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் ஒப்பந்த நடவடிக்கைகளில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் தங்களது ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்ய வேண்டும். அன்று மாலை 4 மணிக்கு அந்த ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு, இறுதி முடிவு அறிவிக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாடு டெண்டர் சட்ட விதி 20-ன்படி, 2 கோடிக்கு மேல் டெண்டர் விட்டால், ஒப்பந்த புள்ளிகளை தாக்கல் செய்ய, அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து 30 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் ஒப்பந்தப்பணி தொடர்பான அறிவிப்பில், இந்த கால அவகாசம் வழங்கப்பட வில்லை. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அம்பத்தூரை சேர்ந்த நடராஜன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ஜெயலலிதாவின் நினைவிடத்தை கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வருகிற 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து ஏற்கனவே ஜெயலலிதாவின் நினைவிடம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் நிலுவையில் இருந்து இருப்பதால்
இந்த வழக்கையும், அந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க பரிந்துரை செய்து நீதிபதி ரவிசந்திரபாபு உத்தரவிட்டார்.