முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தில், 3 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சோதனை நடத்தினர். ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் வசித்த அறையில் சோதனை நடைபெற்றது.
இச்சோதனையின் போது ஒரு லேப்டாப், 4 பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சசிகலா அறையில் இருந்து எலக்ட்ரானிக் கருவிகள் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சசிகலாவின் சகோதரரான திவாகரன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்கிறார்கள், சோதனை குறித்து கருத்துச்சொல்ல ஒன்றுமில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய திவாகரன், "வருமான வரித்துறை சோதனையில் யாரும் தலையிட முடியாது. ஜெயலலிதா வீட்டில் வருமான வரிச்சோதனை நடைபெற்றதை அடுத்து நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஜெயலலிதா வீட்டில் இருந்து லேப்டாப், பென்டிரைவ் கைப்பற்றப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. எனது வீட்டில் இருந்து லேப்டாப், பென்டிரைவ் என எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதேபோல், என் கல்லூரியில் நடைபெற்ற வருமான வரி சோதனையிலும் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை. 1996-ல் இருந்தே சசிகலா, விசாரணை வளையத்தில் தான் இருக்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லும் போது ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள். போயஸ் கார்டனில் இருந்து நான் விலகியே இருக்கின்றேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது சசிகலாவை வீடியோ எடுக்கச் சொன்னதே ஜெயலலிதா தான். பின்னாளில் ஏதாவது பிரச்சனை வரும் என்பதற்காகவே ஜெயலலிதா, சசிகலாவை வீடியோ எடுக்க கூறினார். ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுத்த வீடியோ ஆதாரம் விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும்.
அதே நேரத்தில் சசிகலாவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட ஜெயலலிதா, அவருக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தித் தரவில்லை என்று திவாகரன் குற்றம் சாட்டினார். இதன் மூலம் மற்ற பெண்களுக்கு முன்னுதாரனமாக சசிகலா மாறிவிட்டதாக திவாகரன் வேதனை தெரிவித்தார்.