திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை எதிர்த்த வழக்கில் அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை அங்கீகரித்து ஜெயலலிதா கைரேகையை பதிவு செய்த மருத்துவர் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் தேர்தல் நடந்த நேரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திருப்பரங்குன்றம் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே.போஸ்க்கு கட்சியின் வேட்பாளர் மற்றும் சின்னம் அகியவற்றை அங்கீகரித்து வழங்கும் பி படிவத்தின் வேட்புமனுவில் இடதுகை பெருவிரல் ரேகையை பதிவு செய்து, அதை சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி சான்றளித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் வழக்கில் இந்த ஆவணம் மிக முக்கியமானது என்பதால், இந்த கைரேகையின் உன்மைத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இதனை ஏற்றது சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என கூடுதல் மனு ஒன்றை சரவணன் தாக்கல் செய்தார்.
இந்த மனு குறித்து சாட்சியம் அளித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் அதிகாரி ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அனைவரும் சாட்சியம் அளித்தனர். இதனை தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதி விசாரணையின் போது அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை அங்கீகரித்து, அந்நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கைரேகை பதிவு செய்திருந்தார். இதை பதிவு செய்து அங்கீகரித்த மருத்துவர் பாலாஜி, இவ்வழக்கில் சாட்சியம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரை சரவணன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். சுமார் இரண்டரை மணி நேரம் சாட்சியம் அளித்த அவரது சாட்சியம் முடிவடையாததால், வழக்கின் விசாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அன்றைய தினம் அவர் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.