கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் சடகோப ராமானுஜ ஜீயர் மீதான புகார் மீது விசாரணை செய்து முகந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஆண்டாள் குறித்து ஜனவரி 8 ஆம் தேதி வெளியான தமிழ் செய்திதாள் கட்டுரையில், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தாக புகார் எழுந்தது. இதனையடுத்து கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது.
வைரமுத்து கட்டுரைக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், மீண்டும் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்திப் பேசியதுடன், ஆண்டாள் தொடர்பாக கொளத்தூரில் நடத்தத் திட்டமிட்டுள்ள விவாதம் குறித்துப் பேசினார். அப்போது, கொளத்தூரில் மட்டுமல்ல உலகத்தில் எந்த ஊரிலும், எந்தக் கடவுளையும் ரோட்டோரத்தில் மேடை போட்டு பேசக்கூடாது என்று கூறிய அவர், சாமியார்களெல்லாம் இவ்வளவு நாள் சும்மா இருந்ததாகவும், இனிமேல் தங்களாலும் கல்வீசவும், சோடாபாட்டில் வீசவும் தெரியும் என்றார்.
ஜீயரின் எந்த பேச்சு வன்முறையை தூண்டுகின்றது வையில் இருப்பதாக கூறி திராவிடர் விடுதலை கழகத்தின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வைரவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் ஜீயரின் இந்த பேச்சு இரு தரப்பினர் இடையே வன்முறையை தூண்டும் விதத்தில் உள்ளது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி புகார் அளித்தேன். இதுவரை நான் அளித்த புகார் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே எனது புகார் மீது ஜீயர் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, புகார் தொடர்பாக நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு காவல்துறை விசாரணை நடத்தி முகந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்துவைத்தார்.