Chennai News Updates: அரக்கோணம் அருகே புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

Tamil Nadu News Update Today 27 June 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update Today 27 June 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
electric train accident

Today Latest News Update in Tamil 27 June 2025:பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jun 27, 2025 22:03 IST

    சென்னை ஆர்பிஐ சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்

    29-ம் தேதி முதல் சென்னை ஆர்பிஐ சுரங்கப்பாதை இனி ஒரு வழிபாதை மாற்றப்பட உள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. கடற்கரை சாலையிலிருந்து பாரிமுனை செல்வோருக்கு எந்தவித மாற்றம் இல்லை. மறுமுனையில் வருவோர் சுரங்கப்பாதை அணுகு சாலை - வடக்கு கோட்டை சாலை - முத்துசாமி சாலை - போர் நினைவுச் சின்னம் வழியாக செல்ல வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.



  • Jun 27, 2025 22:02 IST

    அரக்கோணம் அருகே புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சென்னையில் இருந்து சென்ற மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. சித்தேரியில் இருந்து காட்பாடிக்கு சென்ற 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் தடம் புரண்டுள்ளது. இண்ஜினில் இருந்து 3-வது ரயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இறங்கின. மின்சார ரயில் தடம் புரண்டதால், சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக காட்பாடி செல்லும் அனைத்து ரயில் சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது.



  • Advertisment
  • Jun 27, 2025 21:23 IST

    சத்தீஷ்காரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

    சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அபுஜ்மாத் பகுதி காட்டில் நக்சலைட்டுகள் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். 2 பெண் நக்சலைட்டுகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்து நவீன துப்பாக்கிகள், வெடிமருந்துகள் கைபற்றபட்டன.



  • Jun 27, 2025 21:22 IST

    ”தமிழகத்தின் கள நிலவரம் அமித்ஷாவுக்கு தெரியவில்லை”

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தூங்கிக்கொண்டே பகல் கனவு காண்கிறார். தமிழகத்தின் கள நிலவரம் பற்றி அவர் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. மற்ற மாநிலங்களை போல தமிழகத்தை நினைத்து கொண்டிருக்கிறார். மற்ற மாநிலங்களை தமிழகத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறார். அவரது நினைப்பு, விருப்பம் என்பது ஒரு சதவீதம் கூட தமிழகத்தில் கிடையாது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Jun 27, 2025 20:51 IST

    சென்னையில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

    சென்னையில் ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2 கோடி மதிப்பிலான 2.2 கிலோ சூடாபெடரின் என்ற போதைப்பொருளை சென்னை தெற்கு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் வைத்திருந்த பீர்முகமது, ரகுமான் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ஏழு கிணறைச் சேர்ந்த கமார் அலி என்பவரிடமிருந்து போதைப்பொருளை வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jun 27, 2025 20:12 IST

    ”RSS-ன் கனவை ஒருபோதும் வெற்றி பெற விடமாட்டோம்”

    அரசியலமைப்பின் முகப்பில் இருந்து சோசியலிச, மதச்சார்பற்ற ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா பேசியதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். முகமூடி மீண்டும் கிழிந்துள்ளது. சமத்துவம், மதசார்பின்மை, நீதியை பேசுவதால் இந்திய அரசியலமைப்பு அவர்களை உறுத்துகிறது. அரசியலமைப்பு வேண்டாம், மனுஸ்மிருதி வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. விரும்புகிறது. விளிம்புநிலை மற்றும் ஏழைகளின் உரிமைகளைப் பறித்து அவர்களை மீண்டும் அடிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அரசியல் சாசனம் போன்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை அவர்களிடம் இருந்து பறிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.-ன் உண்மையான செயல்திட்டம் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 27, 2025 20:04 IST

    நாளை ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செ. கூட்டம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



  • Jun 27, 2025 19:59 IST

    உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை: பிரக்ஞானந்தா சாம்பியன்

    உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை 2025 போட்டி மாஸ்டர்ஸ் பிரிவில், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்டஸட்டோரோவை வீழ்த்தி தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 27, 2025 19:57 IST

    சிங்கப்பூர் தூதரக அதிகாரியுடன் விஜய் சந்திப்பு

    சிங்கப்பூர் தூதரக அதிகாரி சைமன் வோங், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை இன்று சந்தித்தார். இதுதொடர்பான புகைப்படத்தையும் அவர் எக்ஸ் பக்கத்தில் பதவிட்டு ரசிகர்களுக்கு ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் தளபதி விஜய்யை இன்று சந்தித்தேன். விஜய் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் எது? எனவும் நெட்டிசன்களிடம் கலகலப்பான கேள்வியை எழுப்பி உள்ளார்.



  • Jun 27, 2025 19:43 IST

    பெரியார் மீதான விமர்சனத்தை விஜய் எதிர்க்கவில்லையா? -த.வெ.க.

    பெரியார் மீதான விமர்சனத்தை விஜய் எதிர்க்கவில்லை என்ற விமர்சனம் குறித்து த.வெ.க. தரப்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளட் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். த.வெ.க. கொள்கை பரப்பு செயலாளர் என்ற அடிப்படையில் மாநாடு நடைபெற்ற தினமே 2 பக்க அறிக்கை வெளியிட்டதாக அவர் கூறியுள்ளார். இது தெரியாமல் சிலர் விமர்சனம் செய்து வருவதாகவும், தங்கள் கட்சி தலைவர் விஜய்யின் குரலாகத் தான் தாங்கள் பேசுவதாகவும், எழுதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.



  • Jun 27, 2025 19:35 IST

    பாராசிட்டமால் உள்ளிட்ட 15 மருந்துகளுக்கு தடை: அரசு உத்தரவு

    உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA), பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மாத்திரைகள் குறித்து விரிவான சோதனைகளை மேற்கொண்டது. இந்த சோதனைகளில் 15 மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தோல்வியடைந்ததையடுத்து, அவற்றின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • Jun 27, 2025 19:13 IST

    13 மாவட்டங்களில் இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 27, 2025 19:10 IST

    சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை - விளக்கம்

    சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 20 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 25ம் தேதி இரவு விரும்பத்தகாத நிகழ்வு வளாகத்தில் நடந்துள்ளது. உணவக ஒப்பந்த ஊழியர், மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துள்ளார். மாணவி குரல் எழுப்பியதும், காவலர்கள் அந்நபரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். அனைவருக்கும் பாதுகாப்பான வளாகத்தை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 27, 2025 19:07 IST

    ஜூலை 7ஆம் தேதி முதல் எடப்பாடி தேர்தல் சுற்றுப் பயணம்

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார். முதற்கட்டாக 7 மாவட்டங்களில் 34 சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.



  • Jun 27, 2025 18:36 IST

    போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு

    போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவை போலீஸ் நேற்று கைது செய்தது.



  • Jun 27, 2025 17:35 IST

    ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு

    சிறுவன் கடத்தல் வழக்கில் புதிய பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளது 



  • Jun 27, 2025 17:12 IST

    அ.தி.மு.க விவகாரத்தில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும்? தேர்தல் ஆணையத்திடம் ஐகோர்ட் கேள்வி

    அ.தி.மு.க உட்கட்சி விவகாரத்தில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது



  • Jun 27, 2025 16:55 IST

    தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

    2019ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை, பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்



  • Jun 27, 2025 16:27 IST

    நயினார் நாகேந்திரன் பேட்டி

    Video: 



  • Jun 27, 2025 16:16 IST

    அரசுப்பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

    அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டம் கேரளாவில் நடைமுறையில் உள்ளது. வாட்டர் பெல் திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்



  • Jun 27, 2025 15:35 IST

    காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தொடங்கியது

    காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியின் மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்பு

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு இருப்பதால் தமிழ்நாட்டுக்கான உரிய நீரை குறைவில்லாமல் திறக்க வேண்டும் என தமிழ்நாடு தெரிவிப்பு



  • Jun 27, 2025 15:35 IST

    5 புலிகள் சடலமாகக் கண்டெடுப்பு

    கர்நாடகாவின் மாதேஸ்வரன் மலை வனச் சரகத்தில் 5 புலிகள் சடலமாகக் கண்டெடுப்பு - உயர் மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு



  • Jun 27, 2025 15:30 IST

    சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை: பீகாரைச் சேர்ந்த நபர் கைது

    சென்னை ஐஐடி வளாகத்தின் உள்ளே மாணவிக்கு பாலியல் தொல்லை புகார் - வளாகத்தில் இயங்கும் கடையில் பணியாற்றும் பீகாரைச் சேர்ந்த ரோஷன் குமார் என்பவர் கைது

    பீகாரைச் சேர்ந்த அம்மாணவியிடம் ஐஐடி உள்ளேயே சென்று புகாரைப் பெற்ற கோட்டூர்புரம் மகளிர் காவல் ஆய்வாளர், விசாரணை நடத்தி அந்நபரை கைது செய்துள்ளார்



  • Jun 27, 2025 14:59 IST

    பா.ஜ.கவை தோற்கடிக்கும் அனைத்து பணிகளையும் அதிமுகவினரே செய்வார்கள்: காங்கிரஸ் எம்.பி

    2026 தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் அதில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு பதில் பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், அமைச்சரவையில் பா.ஜ.க. இடம்பெறும் என்பதற்காகவே அதிமுக தோல்வியடையும். பா.ஜ.கவை தோற்கடிக்கும் அனைத்து பணிகளையும் அதிமுகவினரே செய்வார்கள் என்று கூறியுள்ளார்.



  • Jun 27, 2025 14:55 IST

    ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வடமாநில வாலிபர் கைது

    சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவியிடம் கட்டையைக் காட்டி மிரட்டி முடியைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jun 27, 2025 14:03 IST

    பூவை ஜெகன் மூர்த்தி ஜாமின் மனு - இன்று தீர்ப்பு

    காதல் விவகாரம் - சிறுவனை கடத்திய வழக்கில் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த ஜாமின் மனு; விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளத, பூவை ஜெகன் மூர்த்தி விசாரணைக்கு ஆஜராகி விட்ட நிலையில் கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.  இதற்கு பதில் அளித்த காவல்துறை, ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன் மூர்த்தி தான், சிபிசிஐடி விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் முன்ஜாமின் வழங்கக் கூடாது என கூறியுள்ளது.



  • Jun 27, 2025 14:02 IST

    ராமதாஸ் - செல்வப் பெருந்தகை சந்திப்பு

    பாமக நிறுவனர் ராமதாஸுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை சந்திப்பு. கடந்த தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியில் 
    தனக்கு விருப்பம் இல்லை என ராமதாஸ்  தெரிவித்திருந்த நிலையில் செல்வப்பெருந்தகையுடனான இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



  • Jun 27, 2025 13:57 IST

    கூரையில்லா பள்ளிக்கூடம் உருவாக காரணம் கலைஞரும் இன்றைய முதல்வரும் தான்: குன்றகுடி ஆதீனம்

    தமிழ்நாட்டில் கூரையில்லா பள்ளிக்கூடம் உருவாக காரணம் கலைஞரும் இன்றைய முதல்வரும் தான்,  அரசு பள்ளிகளில் கிடைக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுக்க வேண்டும். அங்கும் ஏழை பிள்ளைகள் தான் படிக்கிறார்கள் என்று குற்றக்குடி ஆதினம் பொன்னம்பல தேசிகர் கூறியுள்ளார்.



  • Jun 27, 2025 12:56 IST

    ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன்மூர்த்தி தான் - காவல்துறை

     

    ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன்மூர்த்தி தான் - காவல்துறை. காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவை ஜெகன் மூர்த்தி மனு வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் இன்றே தீர்ப்பு. 



  • Jun 27, 2025 12:31 IST

    சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

    அசோக் நகர் 16வது அவென்யூவில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல். மர்ம நபர்கள் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல், அசோக் நகர் போலீசார் தீவிர விசாரணை



  • Jun 27, 2025 12:24 IST

    தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி - 'அமித் ஷா, இ.பி.எஸ் பேசி முடிவெடுப்பாங்க': நயினார் நாகேந்திரன்

    தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 



  • Jun 27, 2025 12:20 IST

    அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்

    அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஜூலை 15ம் தேதி முதல் தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் காலை உணவுத் திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.600.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 2022 செப்டம்பர் முதல் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டத்தை ஜூலை 15ம் தேதி முதல் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.



  • Jun 27, 2025 12:07 IST

    5 புலிகள் மர்ம மரணம் - தீவிர விசாரணை

    கர்நாடகாவின் சாம்ராஜ் நகரில் 5 புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பரபரப்பு; வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த புலிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன - அறிக்கைக்காக காத்திருக்கும் போலீசார். புலிகளின் உடல்களில் காயங்கள் ஏதும் இல்லாத நிலையில், விஷம் வைத்துக் கொல்லப்பட்டனவா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Jun 27, 2025 12:06 IST

    போதைப்பொருள் விவகாரம் - ஆப்பிரிக்க பெண் கைது

    சென்னை சூளைமேட்டில் போதைப் பொருள் விற்பனை செய்த விவகாரத்தில் 24 பேரை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாரா குமாமாவை பெங்களூரில்வைத்து போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் யாரேனும் சாராவுடன் தொடர்பில் உள்ளனரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Jun 27, 2025 12:03 IST

    மக்களை பாதிக்காத வகையில் ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்: ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா பேட்டி

    காஞ்சிபுரம்: மக்களை பாதிக்காத வகையில் ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா பேட்டி அளித்துள்ளார். காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். பரந்தூரில் விமான நிலையம் அமையுள்ள பகுதியில் ரயில் நிலையம் அமைப்பது பரிசீலனையில் உள்ளது



  • Jun 27, 2025 12:02 IST

    காஞ்சி ஏகாம்பரநாதர் மேனிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள்: முதல்வர் திறந்து வைத்தார்

    இந்து சமய அறநிலையத் துறை சார்பில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 11.15 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடம், சூளைமேடு, அஞ்சுகம் தொடக்கப்பள்ளியில் 2.79 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடம், கலையரங்கம், கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் மற்றும் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.10,000/-, கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பைகள் மற்றும் மிதிவண்டிகளை வழங்கினார்.



  • Jun 27, 2025 11:32 IST

    எடப்பாடி பழனிசாமி சொல்வதுதான் இறுதி தீர்ப்பு: ராஜேந்திர பாலாஜி பேட்டி

    தமிழ்நாட்டில் தே.ஜ.கூட்டணியின் தலைவர் எடப்பாடிதான்; அவர் சொல்வதே இறுதி முடிவு என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 2026ல் தே.ஜ.கூட்டணி ஆட்சி அமையும்; அதில் பாஜக அங்கம் வகிக்கும் என அமித் ஷா பேட்டி அளித்த நிலையில் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். கூட்டணி குறித்த எந்த முடிவு என்றாலும் அது எடப்பாடி பழனிசாமிதான் அறிவிக்க வேண்டும். கூட்டணியின் கட்டளை தளபதி எடப்பாடி பழனிசாமிதான். அமித் ஷா எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பது எனக்கு தெரியாது. எடப்பாடி பழனிசாமி சொல்வதுதான் இறுதி தீர்ப்பு என்று கூறினார்.



  • Jun 27, 2025 11:15 IST

    பொறியியல் மாணவர் சேர்க்கை - தரவரிசை பட்டியல் வெளியீடு

    பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சென்னையில் உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார். நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் சேர 2.5 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர், தரவரிசை பட்டியலுடன் இணைய வழி கலந்தாய்வுக்கான அட்டவணையும் வெளியிடபட்டுள்ளது. கணினி வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் மாவட்டங்களில்  உள்ள உதவி மையங்களுக்கு சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம், http://tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ரேங்க் 
    மதிப்பெண்களை அறியலாம். 



  • Jun 27, 2025 11:11 IST

    தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையின் கீழ் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் இந்த கட்சிகளிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தலைமை தேர்தல் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தவும் வாய்ப்பு அளிக்கப்படும். அதன் பின்னர் தேர்தல் ஆணையத்தால் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 27, 2025 10:26 IST

    கேரளா: கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி 

    கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் கொடகரை பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். தொடர் மழையால் பழைய 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் வடமாநில இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் காலை 6 மணியளவில் நடந்தது. வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்தது.



  • Jun 27, 2025 10:10 IST

    நாடாளுமன்றத்தை விட அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது - தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து

    தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், "நாட்டின் நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித் துறை ஆகிய ஜனநாயகத்தின் 3 பிரிவுகளில் எது உயர்ந்தது என்று எப்போதும் விவாதிக்கப்படுகிறது. நாடாளுமன்றம்தான் உயர்ந்தது என்று பலர் கூறினாலும், நம்பினாலும் என்னைப் பொறுத்தவரை அரசியல் சாசனம்தான் உயர்ந்தது. ஜனநாயகத்தின் 3 பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன. நாடாளுமன்றத்துக்கு சட்டத்தில் திருத்தம் செய்ய அதிகாரம் இருக்கிறது. ஆனால், அரசியல் சாசனத்தின் கட்டமைப்பை மாற்ற முடியாது.

    ஒரு நீதிபதி நமக்கு ஒரு கடமை இருக்கிறது, குடிமக்களின் உரிமைகள், அரசியலமைப்பின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளின் பாதுகாவலர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நமக்கு அதிகாரம் மட்டுமல்ல, ஒரு கடமையும் நம் மீது சுமத்தப்பட்டுள்ளது என உணர வேண்டும். ஒரு நீதிபதி தீர்ப்பு எழுதும்போது சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். மக்கள் தங்கள் தீர்ப்பைப் பற்றி என்ன சொல்வார்கள் என்ற அடிப்படையில் நீதிபதி செயல்படக்கூடாது. அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் அடிப்படையில்தான் என்னுடைய தீர்ப்புகள் அமைந்திருக்கும்." என்று தெரிவித்துள்ளார். 



  • Jun 27, 2025 10:04 IST

    ஜூலையில் த.வெ.க. செயற்குழு கூட்டம்

    தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில், ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Jun 27, 2025 09:53 IST

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு!

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து 71,880க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.85 குறைந்துள்ளது. 



  • Jun 27, 2025 09:29 IST

    என்.டி.ஏ கூட்டணியில் தவெக இணையுமா?

    சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் போதுமான கால அவகாசம் உள்ளது. எனவே சில காலம் காத்திருங்கள் என அமித்ஷா கூறியுள்ளார். 



  • Jun 27, 2025 09:25 IST

    தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா..

    ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகிறது. இந்த தாக்குதலுக்காக ரஷ்யாவிற்கு, வடகொரியா கூடுதல் படைகளை அனுப்பக்கூடும் என தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது.



  • Jun 27, 2025 08:31 IST

    காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jun 27, 2025 08:30 IST

    4,415 இந்தியர்கள் மீட்பு.!

    இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முடிவுக்கு வந்த நிலையில் ஆபரேஷன் சிந்து மூலம் இந்தியர்கள் 4415 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளனர். ஈரானில் இருந்து 3597 பேரும் இஸ்ரேலில் இருந்து 818 பேரும் தாயகம் திரும்பினர்.



  • Jun 27, 2025 08:27 IST

    "NDA கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும்" - உள்துறை அமைச்சர் அமித்ஷா

    2026 தேர்தலில் வென்று என்.டி.ஏ கூட்டணி ஆட்சியமைக்கும். அதில் பாஜக அங்கம் வகிக்கும் என அமித்ஷா கூறியுள்ளார். அதிமுகவில் இருந்துதான் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார். அக்கட்சியில் இருந்து பிரிந்தவர்களை நாங்கள் ஒன்றிணைக்கவில்லை அது அவர்களது உட்கட்சி விவகாரம் என்றார்.



  • Jun 27, 2025 08:26 IST

    நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளின் 700 கிளைகளில் 8.5 லட்சம் போலி கணக்குகள்

    நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளின் 700 கிளைகளில் 8.5 லட்சம் போலி கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. டிஜிட்டல் கொள்ளை, மோசடி முதலீட்டிற்கு சைபர் குற்றவாளிகள் போலி கணக்குகளை பயன்படுத்தியது அம்பலமாகியது.



  • Jun 27, 2025 08:04 IST

    ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

    தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு ஜூலை 2 முதல் 30ஆம் தேதி வரை பணியிடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 14 முதல் 18ஆம் தேதி வரை பணி நியமன கலந்தாய்வு நடைபெறும்.



Tamil News Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: