போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் வீர மரணம் அடைந்ததையொட்டி விருகம்பாக்கம் பகுதியில் நகை கடை அதிபர்கள் மற்றும் ஊழியர்கள் கறுப்பு கொடி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2017/12/z979-300x217.jpg)
ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ்குமார் (வயது 37) சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் ‘மகாலட்சுமி தங்க மாளிகை’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 16-ம் தேதி மதியம் இந்தக் கடையை துளையிட்டு உள்ளே இறங்கிய நபர்கள், நகைக்களையில் இருந்த தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த கொள்ளை தொடர்பாக ஏற்கனவே நான்கு பேர் கைதாகிய நிலையில், மேலும் சிலர் ராஜஸ்தானுக்கு தப்பியுள்ளதாக தெரிய வந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் நேற்று காலை கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டனர். இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தையே இச்சம்பவம் உலுக்கியது.
பெரியபாண்டியனின் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா, தேவர்குளம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மூவிருந்தவல்லி-சாலைப்புதூர் ஆகும். மிக பிற்பட்ட சமூகமான மறவர் சமூகத்தை சேர்ந்தவர் இவர். இவரது தந்தை பெயர் செல்வராஜ். பி.எஸ்சி பட்டதாரியான பெரிய பாண்டியன், கடந்த 2000-மாவது ஆண்டு மே மாதம் சப் இன்ஸ்பெக்டராக தமிழக போலீஸ் துறையில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட பெரிய பாண்டியனின் உடலுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று மாலை 6 மணியளவில் சென்னையிலிருந்து, மதுரைக்கு விமானம் மூலம் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கிருந்து அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அவரது உடல் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், சென்னை மதுரவாயல் போலிஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் வீர மரணம் அடைந்ததையொட்டி விருகம்பாக்கம் பகுதியில் நகைக் கடை அதிபர்கள் மற்றும் ஊழியர்கள் கறுப்பு கொடி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். தங்களுக்காக கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற காவல்துறை அதிகாரி உயிரிழந்திருப்பதால், கண்ணீர் மல்க நகைக் கடை அதிபர்கள் மற்றும் ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.