லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் நடத்திய இளையராஜாவிற்கு, மாநிலங்களவையில் பலரும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, ஜெயாபச்சன் தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக, இளையராஜா இயற்றிய மேற்கத்திய - கர்நாடக இசை கலந்த 'வேலியண்ட்' பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சி, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. இத்தகைய சாதனையை நிகழ்த்திக் காட்டிய இளையராஜாவிற்கு அவரது ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் (மார்ச் 18) டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் இளையராஜா இடையே சந்திப்பு நடைபெற்றது. அதன்படி, இளையராஜாவிற்கு புகழாரம் சூட்டும் விதமாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், "நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக மாநிலங்களவை அமர்வில் பங்கேற்ற இளையராஜாவிற்கு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் நடிகையும், எம்.பி-யுமான ஜெயாபச்சன் ஆகியோர் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்தையும் தெரிவித்தனர். குறிப்பாக, "வணக்கம் பெரியண்ணா" என தமிழில் நெகிழ்ச்சியுடன் தனது வாழ்த்துகளை ஜெயாபச்சன் தெரிவித்துக் கொண்டார். மேலும், இளையராஜாவுடன் அதிக நேரம் செலவிட தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும், அவரது மகனுடன் தான் இணைந்து பணியாற்றியதாகவும் அவர் கூறினார்.