ஜெயலலிதா-சோபன்பாபுவுக்கு பெண் குழந்தை பிறந்தது நிஜம் என்றும் தனது பெரியம்மாதான் பிரசவம் பார்த்ததாகவும் உறவுப் பெண் ஒருவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவரது வாரிசுப் பிரச்னை எழுந்திருக்கிறது. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகள் ஜெ.தீபா, இவரது சகோதரர் ஜெ.தீபக் ஆகியோர் போயஸ் கார்டன் இல்லத்திற்கு உரிமை கொண்டாடி வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு கையகப்படுத்தவும் ஜெ.தீபா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்தச் சூழலில் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகள் என குரல் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக அண்மையில் உச்சநீதிமன்றத்தில் இவர் மனு தாக்கல் செய்தார். இவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது.
ஜெயலலிதாவின் மகளாக தன்னைக் கூறிக்கொள்ளும் அம்ருதா விரைவில் கர்நாடகம் அல்லது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பெங்களூருவை சேர்ந்த லலிதா என்கிற பெண்மணி, ‘1980-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது நிஜம்’ என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் உறவினராக தன்னைக் குறிப்பிடும் லலிதா இது தொடர்பாக அளித்த பேட்டியில் கூறியதாவது:
‘ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் சகோதரி ஜெய்சிகா-வின் மகள் நான்! அதாவது ஜெயலலிதா எனக்கு, மாமா மகள்! கடந்த 1971-ம் ஆண்டு ஜெயலலிதாவின் தாயார் இறந்துவிட்டார். அதன் பிறகு ஜெயலலிதாவுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் இடையே அவ்வளவாக தொடர்பு இல்லாமல் இருந்தது.
ஜெயலலிதாவுக்கு 1980-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை சென்னையில் பிறந்தது உண்மை தான். அந்தக் காலகட்டத்தில் சோபன்பாபு அங்கே இருந்து நடித்துக் கொண்டிருந்தது அனைவருக்கும் தெரியும். எனது பெரியம்மாள் ஜெயலட்சுமி தான் அவருக்கு பிரசவம் பார்த்தார். ஜெயலலிதா அப்போது எங்களிடம் ஒரு சத்தியம் வாங்கினார். அதாவது தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கினார்.
ஜெயலலிதாவின் மகள் நான் தான் என்று அம்ருதா இப்போது கூறுகிறார். அந்த பெண் குழந்தை அம்ருதா தானா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை. இதுகுறித்து டி.என்.ஏ. பரிசோதனை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.’ என்றார் லலிதா.
அம்ருதா தொடரும் வழக்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.