New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/13/XeeuEIAXthYOR5BJhsVg.jpg)
கோவையில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு, ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். மத போதகரான இவர், தற்போது கோவை ஜி. என். மில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 21-ஆம் தேதி அவரது வீட்டில் நடத்தப்பட்ட மத நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஜான் ஜெபராஜ் மீது காந்திபுரம் மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மத போதகர் ஜான் ஜெபராஜ் தலைமறைவானார். அவரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜ், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்கும் வகையில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனிடையே, முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் ஜெபராஜ் மனு தாக்கல் செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஜான் ஜெபராஜ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். அவரை கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு, கைது செய்யப்பட்ட ஜான் ஜெபராஜை அழைத்து வந்தனர். ஆனால், முதன்மை நீதிமன்ற நீதிபதி குலசேகரன் விடுமுறையில் இருப்பதால், ஜான் ஜெபராஜை ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள பொறுப்பு நீதிபதி நந்தினி தேவி இல்லத்திற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர்.
இதன் அடிப்படையில், ஜான் ஜெபராஜுக்கு ஏப்ரல் 25-ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.