Tiruppur: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசப்பிரபு. கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் பல்லடம் மற்றும் சூலூர் பகுதியில் நடைபெறும் குற்றங்களை துணிச்சலாக ஆவணங்கள் மற்றும் காட்சிகளை திரட்டி செய்தியை பதிவு செய்து வந்தார். பல்வேறு செய்திகளின் மூலம் அரசியல் கட்சியினர், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு மிரட்டல்கள் வந்தது.
இந்த நிலையில், நேற்று மதியம் முதல் காமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டை நோட்டமிட்ட காரில் வந்த கும்பல் செய்தியாளர் நேசப்பிரபு குறித்து விசாரித்துள்ளனர். குறிப்பாக, கிருஷ்ணாபுரம் பிரிவு பகுதியில் உள்ள பேக்கரி, செல்போன் கடை மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் தன்னை பற்றி மர்மகும்பல் விசாரிப்பதை செய்தியாளர் நேசப்பி்ரபு அறிந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக உடனடியாக திருப்பூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், அருகிலுள்ள காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். 4 மணி நேரத்திற்கு மேல், தொடர்ச்சியாக தான் சுற்றிவளைக்கப்பட்டதை காவல் துறையிடம் பதிவு செய்துள்ளார். ஆனால், காவல்துறை அலட்சியம் காட்டியுள்ளது. மேலும் தொலைபேசியில் பேசும்போது, மர்ம கும்பல் வந்த காரில் பதவி எண் இல்லை, வாகனத்தின் நிறம், குற்றவாளிகள் குறித்த தகவல்களை போலீசார் கேட்க, நேச பிரபுவும் தொடர்ச்சியாக தகவல்களை பதிவு செய்துள்ளார்.
இதேபோல், காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திலிருந்து தொடர்பு கொண்ட காவலர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் மனு தருமாறு அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளார். இதனிடையே, உடனடியாக தன்னைக் காப்பாற்ற வருமாறு காமநாயக்கன்பாளையம் தலைமை காவலர் கண்ணன் என்பருடன் அலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கும்போது, மர்ம கும்பல் செய்தியாளரை வெட்ட துரத்தியுள்ளது. இதனை சுதாரித்துக் கொண்ட நேச பிரபு உடனடியாக பெட்ரோல் பங்கில் இருந்த அலுவலக அறைக்குள் உள்ளே சென்று உள்பக்கமாக தாளிட்டு கொண்டார்.
இதனையடுத்து, கண்ணாடி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே இருந்த செய்தியாளர் நேச பிரபுவை வெளியே இழுத்த கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாள் மூலம் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதனைப் பார்த்த பங்க் ஊழியர்கள் வருவதைப் பார்த்து உடனடியாக அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது. இரண்டு கைகள் மற்றும் ஒரு இடது கால் மற்றும் தலை என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டால் படுகாயமடைந்த நேசபிரபு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/d4767b23-655.jpg)
இதனை அடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த நேச பிரபுவை மீட்ட பங்க் ஊழியர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நேசபிரபுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சை அறையில் வைத்து நேசப்பிரபுவுக்கு தொடர்ச்சியாக இரவு முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சுமார் நான்கு மணி நேரமாக காவல் துறையுடன் நேசபிரபு நடத்திய உரையாடல்கள் அவரது செல்போனில் பதிவாகியுள்ள நிலையில் , தன்னை சுற்றிவளைத்து தனக்கு உயிருக்கு ஆபத்து என ஒருவர் கூறியும் சட்டம் ஒழுங்கில் காவல்துறை மெத்தனம் காட்டி உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போராட்டம்
இந்நிலையில், நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்டதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு பத்திரிகை சங்கங்களும், அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு தங்களது கன்னடத்தை தெரிவித்துள்ளள்ளனர்.
இந்த நிலையில், திருப்பூர் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு கட்டணம் தெரிவித்து சென்னை, கோவையில் பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மதியம் 1 மணிக்கு பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்திகின்றனர். கோவையில் பத்திரிக்கையாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு காலை 11.30 மணிக்கு போராட்டம் நடத்த உள்ளனர்.
கோவை பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/f1141ef8-158.jpg)
கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசாங்கம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும், முன்கூட்டியே நேசபிரபு காவல்துறையினருக்கு தகவல் அளித்தும் அலட்சியமாக இருந்த காமநாயக்கன்பாளையம் காவலர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
கரூர் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/695e439b-679.jpg)
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு மீது நடைபெற்ற கொலை வெறி தாக்குதலை கண்டித்தும், பாதுகாப்பு வழங்காத காவல்துறையை கண்டித்தும், தாக்குதல் நடத்திய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கரூர் பிரஸ் கிளப் சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் எஸ்.பி-யிடம் மனு
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/f413b7d5-2ed.jpg)
செய்தியாளர் தாக்கப்பட்டத்தை கண்டித்து மாவட்ட கண்காணிப்பாளர் சாமிநாதன் சந்தித்து திருப்பூர் மாவட்ட அனைத்து பத்திரிகையாளர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அவரிடம் வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“