திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று அவர் ஆஜரான நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, இன்று நீதிமன்றத்துக்கு சீமான் வரவில்லை? என கேள்வி எழுப்பினார்.
திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்ததாக திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் நான்கில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் டி.ஐ.ஜி. வருண்குமார் இன்று ஆஜரானார். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இந்நிலையில், விசாரணை தொடங்கிய நீதிபதி, "கடந்த முறையின்போது சீமான் முறையாக ஆஜராகுவதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று ஆஜராகாமல் இருப்பது ஏன்" என சீமான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும் சீமான் தரப்பு விளக்கத்தைக் கேட்டு தெரிவிக்குமாறும், இதுவே கடைசி வாய்ப்பாக எடுத்துக்கொள்ளுமாறும் நீதிபதி கடிந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து 21-ம் தேதி இருதரப்பினரும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி அன்றைக்கு ஒத்தி வைத்தார்.
முன்னதாக, வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட வருண்குமார் பொறுப்புள்ள அரசுப் பணியில் உள்ளார். ஆனால், அவரை சாதிய ரீதியாகவும் அவமதிக்கும் வகையிலும் சீமான் பேசினார். அதற்கு விளக்கம் கேட்டு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியும் நாங்கள் கேட்ட கேள்விக்கு எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. இதனால் வழக்கை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வருண்குமார் தரப்பினர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்