காவல் துறையினருக்கு வார விடுப்பு வழங்குவது குறித்து அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை ஜூலை 19 ஆம் தேதி தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
காவல்துறையினரின் நலன், பணி குறைப்பு, ஆர்டர் லீ தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருபாகரன், காவல் துறையினருக்கு வாரம் ஒருநாள் விடுப்பு வழங்குவது குறித்து பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்
இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டரில் காவல்துறையினருக்கு வார விடுப்பு வழங்க வகை செய்துள்ளதாகவும், வார விடுப்பு நாளில் பணிக்கு வரும் காவலர்களுக்கு 200 ரூபாய் கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
வாரம் 200 ரூபாய் தருவதாக இருந்தால் யாரும் விடுப்பு எடுக்க மாட்டார்கள் என்றும், அரசு ஊழியர்கள் மாதத்தில் இரண்டு நாள் விடுப்பு எடுக்கும் நிலையில் காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஏன் ஒரு நாள் விடுப்பு அளிக்கக்கூடாது என்று விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு என்பது ஆவணங்களில் மட்டுமே இருப்பதாகவும், அதை நடைமுறைப்படுத்த அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை விளக்கமாக தெரிவிக்க உத்தரவிட்டார்.
மேலும், போக்குவரத்து காவல்துறையினர் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதால் அவர்களின் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்ட நீதிபதி, காவல்துறையில் பிற பணிகளில் ஈடுபடும் காவலர்களை வாரத்தில் ஒரு நாளாவது தங்கள் குடும்பத்துடன் செலவிட அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதுதவிர காவல்துறையினர் நல ஆணையம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்
பணிக்கு வரும் காவலர்களுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் என்ற விதியை ஒரு வாரத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று மாற்ற முடியுமா என்பதையும் அரசிடம் விளக்கம் தெரிவிக்க அவர்கள் அறிவுறுத்தி வழக்கை 19 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
காவல்துறையின் பணி என்பது மிகவும் அவசியமானது என்றும் காவல்துறையின் இல்லையென்றால் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலை உருவாகி விடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை தெரிவித்தார்
காவல் துறையினருடன் குற்றவாளிகளுடன் கைகோர்க்க கூடாதென்று தெரிவித்த நீதிபதி, காவல்துறை மீதும் அரசு மீதும் தான் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் நீதிபதி தெரிவித்தார்.