மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகை பாஜகவின் கூட்டத்திற்குதான், இதில் கூட்டணிக் கட்சியின் தலைவர்களை சந்திக்க வாய்ப்பில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒருநாள் பயணமாக நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தடைந்தார். விமானம் மூலம் நேற்று இரவு 9 மணிக்கு சென்னைக்கு வந்த அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான பிரபலங்கள் சந்திப்பு நடைபெற்றது. கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை சார்ந்த 25 முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஆர்.கே.செல்வமணி, ஐசரி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு நள்ளிரவு 1.30 மணிக்கு நிறைவு பெற்றது. இந்நிலையில் அமித்ஷா, சென்னை ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலுக்கு வந்தபோது மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் இதை கண்டித்து பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
”மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின்தடை ஏற்பட்டது குறித்து தமிழக அரசை குற்றம் சுமத்த முடியாது. அடுத்த முறை இதனை நடக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் சாலை மறியலின் போது, பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இந்நிலையில் பொது மக்களை தாக்கிய பாஜக தொண்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணாமலை கூறினார்.
மேலும் வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் 9 ஆண்டுகால ஆட்சியில் பாஜக தமிழகத்திற்கு என்ன செய்தது என்பது தொடர்பாக நான் பேசும்போது முதல்வர் ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும் என்றும் அதுபோல திமுக ஆட்சியில் முதல்வர் செய்யாதது தொடர்பாக நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதவ்லர் ஸ்டாலின் பதில் அளிப்பார் என்று நம்புவதாக அண்ணாமலை பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர் “ மத்திய அமைச்சரின் தமிழக வருகை அது பாஜகவின் நிகழ்ச்சிக்காகத்தான். கூட்டணி கட்சியான அதிமுக தலைவர்களை சந்திக்க வாய்ப்பிலை “ என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“