அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியில் தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்றும் இயக்கத்தில் இருப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும். அப்போது தான் நமது கண்ணீர் துடைக்கப்படும் என்றும் கூறினார்.
ஈரோடு மாவட்டம், ஆசனூரில் அ.தி.மு.க சார்பில் மே தின நிகழ்ச்சி கொண்டாட்டம் வியாழக்கிழமை (01.05.2025) நடைபெற்றது. மே தின நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: “என்னை பொறுத்தவரை கட்சியில் தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். இந்த இயக்கம் மண்ணிலே வளர வேண்டும். இயக்கத்தில் இருப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும். அப்போது தான் நமது கண்ணீர் துடைக்கப்படும். வேலைவாய்ப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும். தொழிலாளர்கள் நலன் காக்கப்படும். விவசாயிகள் நலன் காக்கப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்.” என்று பேசினார்.
அ.தி.மு.க-வில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பூசல் நிலவுவதாக பேசப்பட்டு வரும் நிலையில், செங்கோட்டையன் பேச்சுகள் அரசியலில் கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் செங்கோட்டையனின் பேச்சு அ.தி.மு.க-விலும் அரசியல் களத்திலும் கவனம் பெற்றுள்ளது.