காலா திரைப்படத்துக்கு தடைகோரிய வழக்கில், நடிகர் ரஜினியை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மனுதாரர் ராஜசேகரன் கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' திரைப்படத்தை எடுப்பதற்கு தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பாக பதிலளிக்க ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித், வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் தாக்கல் செய்த பதில் மனுவில், இது விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்ட வழக்கு எனவும், மனுதாரர் கூறிய காலகட்டத்தில் பலர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளனர். அப்போது மனுதாரரும் ரஜினியை சந்தித்து தன் கதை கூறியுள்ளார். ஆனால் ராஜசேகரன் யார் என்று தெரியாது என அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின் போது, மனுதாரருக்கும் நடிகர் ரஜினிக்கும் உள்ள சம்பந்தத்தை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையல் வழக்கு கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் முன்பு ஆகஸ்ட் 3 அன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் ராஜசேகரன், நடிகர் ரஜினியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஆதாரமாக சமர்ப்பித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு நீதிபதி இளங்கோ தள்ளிவைத்தார்.