அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்கும் விதமாக, 1998-ல் பா.ஜ.க ஆட்சியைக் கவிழ்த்த ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை என்று பேசியதால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், 1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது. கடந்த 1999-ம் ஆண்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. ஆட்சி அமைத்ததை தான் கூறினேன் என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க - பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பா.ஜ.க-வை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம்” என்று பேசினார்.
பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்கும் விதமாக ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியது அ.தி.மு.க-வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை என்ற பேச்சிற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த 1999-ம் ஆண்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. ஆட்சி அமைத்ததை தான் கூறினேன். தான் கூறிய கருத்து தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு திரித்து வெளியிடப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
மேலும், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முடிவை நான் ஒருபோதும் வரலாற்று பிழை என பேசவில்லை” என்று கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.