/tamil-ie/media/media_files/uploads/2021/06/mk-stalin-mk-alagiri.jpg)
தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு, ஸ்டாலினும் மு.க.அழகிரியும் இப்போது சந்திக்கலாம் அப்போது சந்திக்கலாம் என்ற பேச்சுகளும் யூகங்களும் புற்றீசல்களைப் போல எழுந்த வண்ணம் உள்ளன.
திமுக தலைவர் கருணாநிதியின் மகன்கள் மு.க.ஸ்டாலினுக்கும் மு.க.அழகிரிக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல்கள் காரணமாக கருணாநிதி உயிருடன் இருந்தபோதே மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, திமுகவில் முன்னிறுக்கைக்கு வந்த ஸ்டாலின் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்து கடந்த மே 7ம் தேதி முதல்வராக பதவியேற்றார். அதுவரை அவ்வப்போது, பேச்சுவார்த்தை ஸ்டாலினை விமர்சித்து வந்த மு.க.அழகிரி முதல்வராக பதவியேற்கும் தனது தம்பிக்கு வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் பதவியேற்கும் தனது தம்பியை நினைத்து பெருமைப் படுவதாகக் கூறினார். பதவியேற்பு விழாவின்போது, மு.க.அழகிரி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்ததால், அவருடைய மகன் துரை தயாநிதியும் மகளும் கலந்துகொண்டனர். உதயநிதி தனது சகோதரர் துரை தயாநிதியைக் கட்டி அணைத்து வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, மு.க்.ஸ்டாலினுக்கும் - மு.க.அழகிரிக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததாகவும் விரைவில் அண்ணன் - தம்பி சந்திப்பு நடக்கும் அழகிரிக்கும் மீண்டும் தென் மண்டல பொறுப்பு அளிக்கப்படும் என்ற பேச்சுகள் எழுந்தன.
முதல்வரான மு.க.ஸ்டாலின் அடுத்த வாரமே கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய மதுரை சென்றார். அப்போது ஸ்டாலினும் - அழகிரியும் சந்திக்கலாம் என்று பேசப்பட்டது. ஆனால், சந்திப்பு நடக்கவில்லை.
இதையடுத்து, மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு 2 வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் சூட்டு விழாவில் ஸ்டாலின் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. அப்போது ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வில் தீவிரமாக இருக்கும் ஸ்டாலின் அங்கே செல்ல முடியாததால் இந்த முறையும் சந்திப்பு நடக்க வில்லை. பேரப்பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்று ஸ்டாலின் மதுரை சென்று பார்ப்பார். அப்போது, அழகிரியை சந்திக்கலாம் என்று பேச்சு அடிபட்டது. ஆனால், இந்த முறையும் சந்திப்பு நடக்கவில்லை.
இப்படி, மு.க.ஸ்டாலின் -மு.க.அழகிரியின் சந்திப்பு இப்போது நடக்கலாம் அப்போது நடக்கலாம் என்று பேச்சுகளும் யூகங்களும் பரவிய நிலையில், தற்போது மு.க.அழகிரி சென்னையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக, உள்ளம் நிறைந்த கலைஞரின் பிறந்தநாளை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள் என்று மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனாலும், கருணாநிதியின் மொத்த குடும்பமும் நாளை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் முதல்வராகி உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு வரும் முதல் பிறந்தநாள் விழா என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக தொண்டர்கள் வீடுகளுக்குள் சமூக இடைவெளியுடன் கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடினாலும், கருணாநிதியின் குடும்பத்தினர் மெரினாவில் உள்ள அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, திமுக ஆட்சிக்கு வந்தபின் கொண்டாடப்படும் கருணாநிதியின் முதல் பிறந்தநாள் விழா என்பதால் இதில் அவருடைய மூத்த மகன் மு.க.அழகிரி இல்லாமலா என்ற கேள்விகள் எழுந்தன.
கருணாநிதியின் பிறந்தநாளில் அவருடைய மொத்த குடும்பமும் ஜூன் 3ம் தேதி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி பிறந்தநாளைக்கொண்டாட காலையிலேயே வருகிறார்கள். இந்த நிகழ்வில் மு.க.அழகிரியும் கலந்துகொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது. அதற்காக மதுரையில் இருந்து புறப்பட்ட அவர் தற்போது சென்னையில்தான் இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் சந்திப்பார்கள். இந்த முறை சந்திப்பு தள்ளிப்போகாது என்று வட்டாரங்கள் தெரிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.