Karunanidhi Funeral : திமுக தலைவர் கருணாநிதியின் உடல் இன்று மாலை 5.30 மணிக்கு மேல் மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Kalaignar Karunanidhi Funeral : கருணாநிதி இறுதி ஊர்வலம் குறித்த அறிவிப்பு வெளியீடு:
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் நேற்று இரவு காவேரி மருத்துவமனையில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டது. பிறகு நள்ளிரவு சிஐடி காலனியில் உள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கும் சிறிது நேரம் வைக்கப்பட்டது. அங்கிருந்து அதிகாலை ஊர்வலமாக எடுத்துச் சென்று ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே, கருணாநிதியின் சமாதியை அமைக்க அனுமதி கோரப்பட்டு நிராகரிக்கப்பட்டது. பின்னர் நேற்று நள்ளிரவே நீதிமன்றத்தை நாடிய திமுகவிற்கு சாதகமான தீர்ப்பு இன்று காலை நீதிமன்றம் வழங்கியது. கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருணாநிதி இறுதி ஊர்வலப் பாதை
இதனை தொடர்ந்து இன்று மாலை ராஜாஜி மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையை, திமுக தலைமை கழகம், பொது செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், மாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை வழியாக, தந்தை பெரியார் சிலையை கடந்து செல்கிறது. பெரியார் சிலையை கடந்து, பேரறிஞர் அண்ணா வந்தடைந்து, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த ஊர்வலத்தில் திமுக தொண்டர்களும், கட்சியினரும், பொதுமக்களும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.