கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும், இத்திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது.
Advertisment
அனைத்து மாவட்டங்களிலும், ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் கொண்ட டோக்கன்களை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் முகாமை இன்று தொடங்கி வைத்தார்.
Advertisment
Advertisements
பின்னர், பயனாளிகளிடம் கலந்துரையாடிய ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து பெண்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது பேசிய ஸ்டாலின், தமிழ்நாட்டு மகளிர் தன்னம்பிக்கையோடும், சுயமரியாதையோடும் வாழ்வதற்காக கொண்டு வரப்பட்டதே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.
மாதம் ரூ. 1,000 என்பது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை.
மகளிர் சுய உதவிக்குழு திட்டத்துக்கு விதை போட்ட மண் தான் தருமபுரி. தருமபுரியில் விதைத்தால், அது தமிழ்நாடு முழுவதும் சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது.
வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாகுபாடின்றி அனைவருக்கும் திட்டம் தீட்டி ஆட்சி செய்து வருகிறோம்..
அடுத்தாண்டு மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு, ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது, குறிப்பிட்ட நாளில் முகாமுக்கு வராதவர்களுக்கு மேலும் 2 நாள் வாய்ப்பு அளிக்கப்படும், என்று ஸ்டாலின் பேசினார்.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் விண்ணப்பம் பதிவேற்றும் பணி தொடங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“