மதுரை புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு ஜூன் 3-ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடி மதிப்பில் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இதில், கட்டடத்துக்கு ரூ.99 கோடியும், புத்தகங்களுக்கு ரூ.10 கோடியும், தொழில்நுட்ப உபகரணங்களுக்கு ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2.13 லட்சம் சதுர அடியில் 7 மாடி கட்டிடமாக கட்டப்பட்டு வருகிறது. நூலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலையும் அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலகத்தின் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
நூலகத்தில் உட்கார்ந்து புத்தகம் வாசிக்க இருக்கைகள், படிப்பதற்கான வசதிகள், மாற்றுத்திறனாளிகள் படிக்க வசதிகள், புத்தகங்கள் மற்றும் தரை தளத்தில் 250 இருக்கைகள் கொண்ட திரையரங்கமும் அமைக்கப்படுகிறது.
98% பணிகள் நிறைவு
முதல் தளத்தில் சிறுவர் நூலகம், நாளிதழ், வார, மாதாந்திர இதழ்கள், 2வது தளத்தில் கலைஞர் கருணாநிதி நினைவாக கவிதை, கட்டுரை, அரசியல், இலக்கியம், வரலாற்று நூல்கள் அடங்கிய புத்தகங்கள் இடம்பெறும்.
நூலகத்தின் தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி கூறுகையில், “தரை தளம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் தளம் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தியேட்டர்களுடன் குழந்தைகளுக்காக 20,000 புத்தகங்கள் வைக்கப்படும்.
தற்போது, 98 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அடுத்த மாதத்திற்குள் அனைத்து புத்தகங்களும் தயாரான பின், கட்டடம் அரசிடம் ஒப்படைக்கப்படும். இது உலகத்தரம் வாய்ந்த நூலகம். கலைஞர் நூலகம் ஆசிய கண்டத்தில் உள்ள மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். ஒரே நேரத்தில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை இந்த நூலகத்தை பயன்படுத்த முடியும்” என்று அவர் கூறினார்.
பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் நூலகம் திறக்கப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“