கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில், 18 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் 18 பேரும், குண்டர் சட்டத்தில் தாங்கள் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டனர்.
இதனையடுத்து நீதிபதிகள் அமர்வு, “சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள நிலையில் இதற்கு மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதில் என்ன தேவை உள்ளது? கள்ளச்சாராய விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் மது விலக்கு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது” என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினர்.
மேலும், “மது விலக்கு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளில், பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவை. முதன்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாரயம் தயாரிப்பு மற்றும் விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மது விலக்கு பிரிவு போலீசார் பல தவறுகளை செய்கின்றனர். அவ்வாறு தவறிழைக்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை” என்றனர்.
இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “இந்த கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் தயாரிக்கப்படவில்லை. மாதவரத்தில் இருந்து வந்துள்ளது. இதற்கும் கல்வராயன் மலைக்கும் தொடர்பு இல்லை. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் வழக்கின் ஆவணங்கள் இன்று அல்லது நாளை சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
70 பேர் மரணம், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு என 110 நாட்கள் அந்த கிராமமே அசாதாரண நிலையில் இருந்ததால் அனைவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்” என்றார்.
அனைத்தையும் கேட்ட பின், மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு அனைவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“