கள்ளக்குறிச்சி அருகே அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் குழந்தைகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரை தம்பதி முற்றுகையிட்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் – லட்சுமி தம்பதி. இவர்கள் இரு குழந்தைகளுடன் வீடு இல்லாத நிலையில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து, தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி மனு அளித்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வந்தனர்.
இதையும் படியுங்கள்: அவர்களாக முறித்துக்கொள்ளும் வரை பா.ஜ.க கூட்டணியில் தொடர்வேன் – ஓ.பி.எஸ் பேட்டி
இந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி வருவாய் துறையினர் இந்த தம்பதிக்கு வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளனர். ஆனால், வீட்டு மனை பட்டா பெற்ற தம்பதியினர் எங்களுக்கான வீட்டுமனை இருக்கும் இடத்தைக் காட்டுங்கள் என வருவாய்த் துறையிடம் மீண்டும் கோரியுள்ளனர். இதனையடுத்து வருவாய் துறையினர் உலகங்காத்தான் கிராமத்திற்கு சென்று வெங்கடேசன் -லட்சுமி தம்பதிக்கு நேற்று முன் தினம் அரசு இடத்தில் நிலம் ஒதுக்கி எல்லைக் கற்களை நட்டு தம்பதியிடம் வழங்கியுள்ளனர்.
ஆனால் இதை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஏற்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்ட கல்லை பிடுங்கி எறிந்ததாக தெரிகிறது. மேலும் அந்த தம்பதி அந்த இடத்திற்கு வரவிடாதபடி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வெங்கடேசன், லட்சுமி தம்பதியினர் வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில்தான் உலகங்காத்தான் கிராமத்திற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். அங்கு பொதுமக்களுக்கு உதயநிதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் உதயநிதி காரில் ஏறிச் செல்ல முயன்றபோது அங்கு குழந்தைகளுடன் வந்த வெங்கடேசன் - லட்சுமி தம்பதி அரசு அதிகாரிகள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா கொடுத்ததையும், அங்கு வசிக்க விடாமல் அக்கம்பக்கத்தினர் மிரட்டல் விடுத்ததாகவும் கண்ணீருடன் கூறினர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், அவர்களிடம் தான் இடம் ஒதுக்கி வீடு கட்டித் தருவதாக தெரிவித்தார்.
ஆனால் அதைக் கேட்காமல் அந்தத் தம்பதியினர் அமைச்சர் உதயநிதியிடம் சொல்வதற்காக சப்தம் போட்டுக் கொண்டே இருந்தார்கள். இந்த நிலையில் ஷ்ரவன்குமார், வெங்கடேசனின் தோளில் தட்டிக் கொடுத்து அவர்களுக்கு வேண்டியதை கொடுப்பதாகவும் பொறுமையாக இருக்குமாறும் தெரிவித்தார். இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil