கமல்ஹாசன் நடத்தும் மகளிர் தின மாநாடு இன்று மாலையில் நடக்கிறது. ‘நம்மவர்கள் பேனர்கள், பதாகைகளை தவிர்க்கவும்’ என கூறியிருக்கிறார்.
கமல்ஹாசன், ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் புதிய கட்சியை கடந்த மாதம் 21-ம் தேதி மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். அதன்பிறகு தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.
கமல்ஹாசன் தனது 2-வது பொதுக்கூட்டத்தை இன்று சென்னையில் மகளிர் தின மாநாடாக நடத்துகிறார். சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று (மார்ச் 8) மாலை 5 மணிக்கு இந்த மாநாடு நடக்கிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினரும், மகளிரும் கலந்து கொள்கிறார்கள்.
கமல்ஹாசனின் அரசியலுக்கு கிடைக்கும் ஆதரவை அளவிடும் இன்னொரு அளவீடாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இன்று தனது மாநாடு குறித்து ட்விட்டரில் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் கமல்ஹாசன். அதில், ‘இன்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் மகளிர் தின விழாவிற்கு அனைவரும் வருக. மக்களுக்கு இடையூறு இல்லாதிருக்க, நம்மவர்கள் போஸ்டர்கள்,பேனர்கள், பதாகைகளைத் தவிர்க்கவும்!’ என குறிப்பிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசனின் இந்த ‘ட்வீட்’ அரசியல் வட்டாரத்தில் சில விவாதங்களையும் கிளப்பியிருக்கிறது. அண்மையில் சென்னை வேலப்பன்சாவடியில் ஏ.சி.சண்முகம் ஏற்பாட்டில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அந்த விழாவையொட்டி ரஜினிகாந்த் செல்லும் பாதையெங்கும் பெருமளவில் அவரது மன்றத்தினர் திரண்டனர். ஏராளமான பேனர்களை சாலைகளில் வைத்தும் சர்ச்சை ஆனது.
ரஜினிகாந்த், அந்தக் கூட்டத்தில் பேசுகையில் பேனர்களுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அதேபோன்ற பேனர்கள் இன்று தனது மாநாட்டிலும் முளைத்துவிடக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கமல்ஹாசன். இதை அவரது மய்யத்தினர் ஏற்றுக்கொண்டாலும், ரஜினிகாந்த் நிகழ்ச்சிக்கு திரண்டதைப் போல கூட்டத்தை காண்பிக்க வேண்டிய நெருக்கடி அவர்களுக்கு உருவாகியிருக்கிறது.