Kamal Haasan and P.V.Sindhu met in Chennai: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து வியாழக்கிழமை சென்னையில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன் என்று கூறினார்.
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பேட்மின்டன் வீராங்கனை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்த வீராங்கனை தற்போது இந்த வீட்டில் இருக்கிறார். இது நாங்கள் இருந்த வீடு. இப்போது அலுவலகமாக இருக்கிறது. இங்கே அவர்களை வரவேற்பதில் நாங்களும், நண்பர்களும் பெருமைப்படுகிறோம். இது கட்சிக்கெல்லாம் அப்பாற்பட்டது. தேசத்தின் பெருமையைக் கொண்டாடும் ஒரு விஷயம்” என்று கூறினார்.
இதையடுத்து பேசிய பி.வி.சிந்து “எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன். அவருடைய நடிப்பு மிகவும் பிடிக்கும். அவருடைய படங்களைப் பார்த்திருக்கிறேன்.
அவரை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. தற்போது என்னுடைய ஒலிம்பிக் தகுதிப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் என்னுடைய முழுத் திறனை வெளிப்படுத்துவேன். அதேநேரத்தில் டோக்கியோவில் நடைபெற உள்ள போட்டிக்காகவும் தயாராகிவருகிறேன்” என்று கூறினார்.
பி.வி.சிந்து பேசிய முடித்த பின் அடுத்து பேசிய கமல்ஹாசன் “இங்கே வாய்ப்பில்லாத ஏழைக் குழந்தைகளுக்குப் பயிற்சி மையம் அமைக்க வேண்டும். அது வியாபாரமாக இல்லாமல், நாட்டுக்காக செய்ய வேண்டும். அதற்கு என்ன உதவிகள் தேவையோ அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். பி.வி.சிந்து தான் சம்பாதித்த பெருமையையும் புகழையும் மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க முடியாது. ஆனால், அவரிடம் இருக்கும் திறமையை மற்றவர்களுக்கு அளிக்க முடியும். 8 வயதிலிருந்து அவர்கள் இதே கனவாக, முழுமூச்சாக இருந்து சாதித்துள்ளார்.” என்று கூறினர்.
இதையடுத்து செய்தியாளர்கள், கமல்ஹாசனிடம், சீன அதிபரின் வருகையை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “இரண்டு நாட்டுத் தலைவர்கள் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கின்றனர். சீன அதிபர் வருகிறார். இருபெரும் தலைவர்களும், இரண்டு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் முடிவுகள் எடுக்க முனைந்தாலும், அது வெற்றிபெற வேண்டும் என்று இந்தியராகவும், இந்திய - சீன உறவு மேம்பட வேண்டும் என்ற ஆசையுள்ளவனாகவும் தெரிவித்துக்கொள்கிறேன். பேனர் கூடாது என்று என்னால் சொல்லவே முடியாது. ஏனென்றால் நான் சினிமாத்துறையில் இருப்பவன். எங்களுக்கு பேனர் உண்டு. சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற இடங்களில் பேனர் வைக்கலாம். அது எல்லா நகரங்களிலும் அதற்கு அனுமதி உண்டு; இடமுண்டு. சீன அதிபர் வருகையில் அப்படிச் செய்ய முடியாது. அவர் இங்கே வருகிறார். அவரை வரவேற்பது நாட்டின் கடமை. ” என்று கூறினார்.
கோபேக் மோடி ஹேஷ்டேக் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “கோபேக் கோபேக்னு சொல்லி அவர் வரமாலே போய்விட்டால்... தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது. நேர்மையான விமர்சனங்களை முன்வைப்போம். அதை அவர் எப்படி ஏற்றுக்கொள்வாரோ அப்படி ஏற்றுக்கொள்ளட்டும்” என்று பதில் அளித்தார்.