கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக, மகளிருக்கான 'மய்யம் விருதுகள்' வழங்கும் நிகழ்ச்சி நேற்று (செப்.17) நடைபெற்றது. இதில்
பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு கட்சி தலைவர் கமல்ஹாசன் விருதுகளை வழங்கி பாராட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், "உலகில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தவர்கள் சாமானியர்கள். மாற்றம் நம்மில் இருந்து துவங்க வேண்டும். புலம்புவதால் பிரயோஜனம் இல்லை. காந்தி வந்தவுடன் சுதந்திரம் கிடைத்து விடவில்லை. பொறுமையாக இருந்து தன் பணியை செய்து முடித்து விட்டு போனார். பார்வையாளர்கள் அனைவருமே மாற்றத்தின் விதைகள். பீடிகைகளுக்கு நேரமில்லை, வேலையில் இறங்கனும், அதைத்தான் நாங்கள் செய்கின்றோம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மகளிர் சாதனையாளர் விருது ஆண்டு தோறும் வழங்கி வருகிறோம். 2 முறை புடவை கட்டி பெண்ணாக நடித்திருக்கிறேன். அப்போதே
பெண்ணாக பிறந்து இருக்கலாமோ? என்று நினைத்திருக்கிறேன். பெருமை படக்கூடிய பிறவி பெண். 2 பெண் குழந்தைகளுக்கு தந்தை என சொல்கின்றனர். அதுஇல்லை.
தெரியாமல் நிலவும் பல அவலங்கள் இங்கு உண்டு. 35 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட பெற்றோரால் பாசிட்டிவ் ஆன குழந்தைகள். அவர்களில் பிழைக்க வாய்ப்பில்லை என்ற 2000 குழந்தைகளை தேர்வு செய்து அவர்களின் தந்தையாக இருக்க 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற அமைப்பை உருவாக்கினோம்.
அதற்கு மருந்தை கண்டு பிடித்தார்கள். சிறிய விழுக்காடு மரணத்தை தவிர பலர் அதில் பிழைத்து பல்வேறு பணிகளில் இருக்கின்றனர். 'பெற்றால்தான் பிள்ளையா' அமைப்பின் மூலம் அதை செய்ய முடிந்தது" என்றார்.
"பெண்களுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்க வேண்டும். தாய் நாடு, தாய் மண் என்று சொல்கின்றனர், ஆனால் ஊதியம் வழங்குவதை பின்னர் செஞ்சிரலாம் என வாக்குறுதி கொடுக்கின்றனர். அது போதாது, வாக்குறுதியை அழுத்தம் கொடுத்து செய்ய வைக்க வேண்டும்.
அரசியல் வேண்டாம் என்று விலகினால் வேறு வழியாக அரசியல் வரும். நீங்கள் அமைதியாக இருப்பதுதான் பேராபத்து. ஓட்டையாவது போடுங்கள், ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். நான் பணம் கொடுக்க மாட்டேன். உங்கள் மதிப்பை விட குறைவான பணம் வாக்குக்கு கொடுக்கின்றனர். கோபம் வர வேண்டும், ரௌத்திரம் பழக வேண்டும். நாட்டுப்புற கலைகளில் இளைஞர்கள் இருப்பது பெருமகிழ்ச்சியை கொடுக்கிறது. அடுத்த தலைமுறை ஆடிப்பார்க்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறி இருக்கிறது. தமிழுக்கு மிக நெருக்கமானவன் நான்.
கலையை பற்றி பேசாமல், அரசியல் பற்றி பேசினால் அது வெறும் மண். கலைதான் என்னுடைய மண்ணின் மணத்தை உணர்த்தும். இன்னும் இடது, வலது என அல்லாடிக்கொண்டு இருக்கின்றனர்.
வெளிநாடுகளில் இடது, வலது ஆகியவற்றை தாண்டி மைய கருத்துக்கு வர துவங்கி இருக்கின்றனர். நான் ஆசியாவின் முதல் மய்ய கருத்தாளன். அனைவரும் மய்யத்திற்கு வாருங்கள் நியாயத்திற்கு வாருங்கள்" என்று கமல் பேசினார்.
செய்தி பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.