ரஜினிகாந்தை கன்னடராக பட்டியலிட்டு கமல்ஹாசன் போட்ட ட்வீட், பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவேசம் அடைந்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் தனது பேட்டிகளில் தன்னை ‘பச்சைத் தமிழன்’ என குறிப்பிட்டுக் கொள்கிறார். தனது பூர்வீகம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் என்றும் கூறியிருக்கிறார். இந்தச் சூழலில் மக்கள் நீதி மய்யம் தலைவரான கமல்ஹாசன் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா நியமனம் தொடர்பாக வெளியிட்ட ட்வீட், ரஜினிகாந்தை சீண்டுவதாக அமைந்தது.
கமல்ஹாசன் இது தொடர்பாக வெளியிட்ட முதல் ட்வீட்டில், ‘கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.
கமல்ஹாசன் அடுத்து ஆங்கிலத்தில் வெளியிட்ட இன்னொரு ட்வீட் சற்றே குழப்பமானது. அதில் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட தனது மதிப்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களை பட்டியல் இட்டிருந்தார். ‘என் குருக்களின் ஒருவரான நாகேஷ், திரு ராஜ்குமார் அண்ணா, திருமதி சரோஜாதேவி மற்றும் என் நண்பர்கள் திரு. ரஜினிகாந்த் மற்றும் திரு அம்பரீஷ் ஆகியோர் என் சொந்தம். மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் நகைச்சுவை, துணைவேந்தர் விஷயத்தில் உரசுவதில் வேண்டாம். எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தேவை’ என கூறுவதாக அமைகிறது கமல்ஹாசனின் ஆங்கில ட்வீட். ஆனாலும் கமல்ஹாசனே தனது ஆங்கில ட்வீட்டுக்கு சரியான தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் தமிழக அரசியல் களத்தில் நுழையும் வேளையில் அவரை கன்னடராக பட்டியல் இட்டு கமல்ஹாசன் இட்டிருக்கும் இந்தப் பதிவு ரஜினிகாந்த் ரசிகர்களை ஆவேசப்பட வைத்திருக்கிறது. தொடர்ந்து கமல்ஹாசன் இதேபோல திட்டமிட்டு ரஜினியை சீண்டி வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். கமல்ஹாசனின் ட்விட்டர் பக்கத்தில் ரஜினி ரசிகர்கள் பலரும் இதற்கு பதிலடி கொடுத்து வருவதையும் காண முடிகிறது.