Advertisment

கமல்ஹாசன் அரசியல் பயணம் LIVE UPDATES : 'மக்கள் நீதி மய்யம்' என்று தனது கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்ஹாசன்

கமல்ஹாசன் புதிய அரசியல் கட்சி தொடக்கம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் அவரது அரசியல் பயணம் ஆரம்பிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamal - fishermens

கமல்ஹாசன் புதிய அரசியல் கட்சி தொடக்கம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் அவரது அரசியல் பயணம் ஆரம்பிக்கிறது.

Advertisment

கமல்ஹாசன், இந்தியாவைத் தாண்டி உலக அளவில் அறியப்படும் தமிழ் நடிகர்! தமிழ் சினிமாவின் எல்லையை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றவர் அவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியில் ஷாருக்கான் இன்று முயற்சி செய்யும் குள்ள வேடத்தை எப்போதோ அபூர்வ சகோதரர்களில் சாதித்தவர் அவர்!

கமல்ஹாசனின் சினிமா, ஒரு வெற்றிப் பயணம்தான். அதில் உச்சம் தொட்டு நின்ற போதெல்லாம்கூட அரசியல் குறித்து யோசிக்க மறுத்த கமல்ஹாசன், இப்போது தனிக் கட்சி, தனிக் கொடி என களம் இறங்குகிறார். இதற்கான கடந்த சில நாட்களாக அவர் மேற்கொண்டிருந்த முன் தயாரிப்புகள் பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.

கமல்ஹாசன் அண்மையில் ஹார்வர்ட் பல்கலைக்கு சென்றபோதும்கூட, அங்கிருந்த நிபுணர்களை சந்தித்து தமிழக தேவைகள் குறித்து விவாதித்தார். முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்றவர்கள் என்ற அடிப்படையில் விஜயகாந்த், சீமான் ஆகியோரை சந்தித்து உரையாடினார்.

கமல்ஹாசனின் ‘க்ளைமாக்ஸ் டே’ இன்று! அவர் பிறந்த மண்ணான சிவகங்கைச் சீமையில் அவரது அரசியல் பயணம் ஆரம்பிக்கிறது. இதற்காக நேற்றே மதுரை வந்து இறங்கிய கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கமல்ஹாசனின் இன்றைய அரசியல் நுழைவு தொடர்பாக ‘ஐஇ தமிழ்’ வழங்கும் LIVE UPDATES இங்கே!

publive-image

இரவு 07.30 - கமல்ஹாசன் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். 'மக்கள் நீதி மய்யம்' என்று தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.

publive-image கமல்ஹாசனின் கட்சி கொடி

இரவு 07.12 : பொதுக்கூட்டத்தில் பேசிய பாடலாசிரியர் சினேகன், "184 நாடுகளிலும் உள்ள தமிழர்கள் வேண்டிய மாற்றத்தை கொடுக்க கமல்ஹாசன் வந்துள்ளார். இன்றுமுதல் நாம் ஒவ்வொரு அடியையும் மிகக் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். எப்போது கேப் கிடைக்கும், ஆப்பு அடிக்கலாம் என உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் மக்களுக்கான தலைவனை அரசியல் தலைவர்கள் வளரவிட மாட்டார்கள். அப்துல் கலாமின் இடத்தை நிரப்புவதற்கு கமல்ஹாசன் வந்துள்ளார். இனி நீங்கள் ரசிகர்கள் கிடையாது. மக்களின் பிரதிநிதி" என்றார்.

publive-image

இரவு 07.10 : பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள ஒத்தக்கடை மைதானத்திற்கு கமல்ஹாசன் வந்தடைந்தார்.

இரவு 07.00 : முதலாவதாக மேடையில் பேசிவரும் இயக்குனர் ராசி அழகப்பன், "கண்ணுக்கெட்டிய தூரம் வரை கமல்ஹாசனின் இதயங்கள் மட்டுமே தெரிகிறது. ட்விட்டரில் மட்டும் எழுதிக் கொண்டிருப்பவர் அல்ல கமல்ஹாசன். அவரை களத்திற்கு வரச் சொன்னீர்கள். இதோ வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை இந்த மதுரை முதல்வராக்கியது. இன்று அதே மதுரை, கமலை முதல்வராக்க துடித்துக் கொண்டிருக்கிறது" என்றார்.

publive-image

மாலை 06.50 : கமல்ஹாசனும், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஒரே காரில் பொதுக் கூட்டத்திற்கு சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

மாலை 06.40 : பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டார் கமல்ஹாசன்.

மாலை 06.30 : இன்னும் சற்று நேரத்தில் தனது புதிய கட்சியின் கொடியை ஏற்ற உள்ளார் கமல்ஹாசன்.

மாலை 06.15 : கமல்ஹாசனை ஆசிர்வாதம் செய்து அனுப்பிய விஜயகாந்த் தேர்தல் நேரத்தில் அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுப்பார் என பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.

மாலை 06.00: மதுரையில் கமல்ஹாசன் பங்கேற்கவிருக்கும் மாபெரும் பொதுக் கூட்டம் இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ளது.

மாலை 05.00 : கமலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுரை வந்தார். மதுரை விமான நிலையம் வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை ஆட்சியர் வீரராகவ ராவ் வரவேற்றார்.

மாலை 04.30 : மாலை ஐந்து மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்து இறங்கவுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வரவேற்க, கமல்ஹாசன் விமான நிலையம் சென்றுள்ளார்.

மாலை 04.15 : ரஜினி, கமல், விஜய் என யார் அரசியலுக்கு வந்தாலும் அடக்குமுறைக்கு எதிரான கொள்கை இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.

பிற்பகல் 03.30 : மதுரைக்கு செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்களுக்கு மத்தியில் சில நிமிடங்கள் மட்டும் பேசிய கமல்ஹாசன், 'மதுரைக்கு செல்ல நேரமாகிவிட்டது. உங்களிடம் உத்தரவு பெற்று விடைபெறுகிறேன்' என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார்.

பிற்பகல் 02.50 : 1995ம் ஆண்டுக்குப் பிறகு, தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்றார் கமல்ஹாசன்.

பகல் 1.00 : ராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல் பேசியதாவது : ’’கமல்ஹாசனை சினிமா நடிகனாக பர்த்திருப்பீர்கள். இனி நான் உங்கள் வீட்டு விளக்கு. இந்த விளக்கை பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை. நாலு புறமும் சுற்றி நின்று என்னை அணையாமல் பாதுகாக்க வேண்டியது உங்கள் கையில் இருக்கிறது. உங்களின் அன்பு வெள்ளத்தில் நனையவே இங்கு வந்தேன்’’ என்றார்.

மதியம் 12.00 : 'தனது பாவத்தை கழிப்பதற்காகவே கமல்ஹாசன் ராமேஸ்வரத்துக்கு சென்றுள்ளார். அரசியலில் வெற்றிடம் என்று எதுவும் இல்லை. கலைத்துறையில் இருந்த போது என்ன சேவை செய்தீர்கள்? என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கமல்ஹாசனை விமர்சித்துள்ளார்.

காலை 11.45 : மதுரையில் கமல் பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்பட்ட மெகா எல்இடி ஸ்கிரீன் சரிந்தது. அதை சரிசெய்யும் பணி நடப்பதால் விழா பந்தலுக்கு வந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மாலையில் மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென வீசிய சூறைக்காற்றால் எல்இடி திரை சரிந்து விழுந்தது.

காலை 11.30 : கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "பள்ளிக்கூடத்திற்கு காலை 7.30 மணிக்கு சென்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் தான். கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை. அதை இந்தியாவில் விதைப்பதில்லை"என கிண்டல் செய்து விமர்சித்தார்.

காலை 10.55 : தொடர்ந்து பேசிய கமல், "அரவிந்த் கெஜ்ரிவால் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்கிறார். சிலர் வீடியோ மூலம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நேற்று இரவு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர், "கொள்கை என்ன என்பது முக்கியமல்ல... மக்களுக்கு என்ன நல்லது செய்யப் போகிறோம் என்ற பட்டியல் உங்களிடம் இருந்தால், அதுவே உங்களது கொள்கையாக மாறிவிடப் போகிறது" என்றார். கிட்டத்தட்ட எனது கருத்தை அப்படியே அவர் பிரதிபலித்தார். எனது அரசியலில் ஹீரோக்களில் அவரும் ஒருவர்" என்றார் கமல்ஹாசன்.

காலை 10.50 : பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கமல்ஹாசன், "கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணம் தொடங்கியதில் அரசியல் இல்லை. அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. நான் பள்ளிக்குச் செல்வதை தடுக்கலாம்; ஆனால், பாடம் படிப்பதை யாராலும் தடுக்க முடியாது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட எனது கட்சிக் கொடி, கொள்கை குறித்து அறிவிக்க முடியும். ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் அதை செய்யவே விரும்புகிறேன். அவர்கள் கொடுக்கும் ஆரவாரம், எனக்கும் மேலும் ஊக்கத்தைக் கொடுக்கும். அப்போது நான் நீண்ட நேரம் பேசுவேன். கொள்கைகளை புரியும் படி பேசுவேன்" என்றார்.

publive-image

காலை 10.45 : பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய கமல், சில மீனவ பிரதிநிதிகளை மேடைக்கு அழைத்து, 'நான் உங்களிடம் மனுக்கள் வாங்கவில்லை என கூறப்பட்டது. மனுக்கள் ஏதும் கொண்டு வந்தீர்களா? என கேள்விக் கேட்ட கமல், மீடியாவைப் பார்த்து, மீனவர்கள் சந்திப்பில் நீங்கள் குறுக்குச் சுவர் போல் வந்ததால், என்னால் அவர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கமுடியாமல் போய்விட்டது' என்றார். பின், தங்களது குறைகள் குறித்து மீனவர்கள் கமலிடம் மனு அளித்தனர். அப்போது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமலிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து பேசிய கமல், 'கட்சிக்கு ஆள் சேர்க்க வரவில்லை, அவர்களோடு சேரவே நான் வந்துள்ளேன்' என்றார்.  பின், மீனவ பிரதிநிதிகள் கொண்டு வந்த சால்வைகளை ஏற்றுக் கொள்ள மறுத்த கமல், 'நானே உங்களுக்கு சால்வை தான்' என்று கூறி, அவர்களை கட்டி அணைத்துக் கொண்டார்.

publive-image

காலை 9.45 : கமலிடம் மனுக்களை அளிக்க ஏராளமான மீனவர்கள் காத்திருந்தனர்; 2 நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு புறப்பட்டு சென்றதால் மீனவர்கள் ஏமாற்றம்.

காலை 9.30 : ராமேஸ்வரம் கணேஷ் மஹாலில் மீனவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர், ‘’உங்களை சந்திக்க வந்தேன். உங்கள் செவிசாய்க்க வேண்டியது எனது கடமை. இன்று மாலை கட்சி தொடங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும். அங்கு முடிந்தவர்கள் வாருங்கள். கடமை பட்டவர்கள் கட்டாயம் வர வேண்டும். இன்னொரு நாள் உங்களை சந்திக்கிறேன். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்’’ என்றார்.

காலை 9.00 : கலாம் வீட்டில் இருந்து நாளை நமதே பயணத்தை தொடங்கியதற்காக மகிழ்ச்சி அடைவதாக கமல் ட்விட் செய்துள்ளார்.

காலை 8.30 : கலாம் வீட்டில் இருந்து கிளம்பிய கமல், கலாம் படித்த பள்ளிக்குச் சென்றார். உள்ளே செல்ல அரசு அனுமதி கொடுக்காததால், வெளியில் இருந்து பார்த்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பினார்.

காலை 8.10 : கலாம் வீட்டில் இருந்து வெளியே வந்த கமலிடம், பேட்டி காண பத்திரிகையாளர்கள் முயன்றனர். தொண்டர்கள் அதிக அளவில் குவிந்திருந்ததால், பேட்டியளிக்க முடியவில்லை. அங்கிருந்து மீனவர்களை சந்திக்க கிளம்பினார்.

காலை 7.45 : அப்துல் கலாம் இல்லம் வந்து அவரது உறவினர்களை கமல்ஹாசன் சந்தித்தார். அங்கு திரளான ஆதரவாளர்கள் கூடினர். அப்துல் கலாமின் மூத்த சகோதரரிடம் ஆசி பெற்றார்.

காலை 7.45 : அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல கமல்ஹாசன் திட்டமிட்டிருந்தார். ஆனால் பள்ளிகளில் அரசியல் ரீதியிலான நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறது. அந்தத் தடை காரணமாக அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு கமல் செல்ல இயலாது.

காலை 7.35 : மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் மாலை 6.30-க்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன். இந்த பிரமாண்டக் கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து கமல்ஹாசன் ஆதரவாளர்களும், நற்பணி இயக்கத்தினரும் திரள்கிறார்கள்.

காலை 7.30 : பகல் 12.30-க்கு ராமநாதபுரம், பிற்பகல் 2.30-க்கு பரமக்குடி, பிற்பகல் 3 மணிக்கு மானாமதுரை ஆகிய இடங்களில் கமல்ஹாசன் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

Kamal Haasan New Party, Launching, Flag, LIVE UPDATES கமல்ஹாசனை எதிர்பார்த்து, அப்துல் கலாம் இல்லம் முன்பு கூட்டம்

காலை 7.25 : காலை 8.15 மணிக்கு அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு செல்லும் கமல்ஹாசன், பகல் 11.10 மணிக்கு அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

காலை 7.20 : கமல்ஹாசன் அரசியல் பயணம் இன்று தொடங்குகிறது. காலை 7.45 மணிக்கு அப்துல்கலாம் இல்லம் செல்கிறார் கமல்ஹாசன். அங்கு கலாமின் சகோதரர் மற்றும் உறவினர்களிடம் வாழ்த்து பெறுகிறார்.

 

Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment