தேசிய கல்விக் கொள்கையை பல மொழிகளில் வெளியிட்டிருக்கும் மத்திய அரசு தமிழை புறக்கணித்தது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டுள்ள மநீம தலைவர் கமல்ஹாசன், மேடைப்பேச்சில் திருக்குறளை, பாரதியார் கவிதைகளைக் குறிப்பிட்டு தமிழ் மீது பற்று இருப்பது போல காட்டிக்கொள்வதெல்லாம் வெறும் நாடகமே என்று மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை 2020ல் உள்ள பல விதிமுறைகளுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பள்ளி மாணவர்களுக்கு கைத் தொழில் திறனை கற்றுக்கொடுப்பது. அனைத்து உயர் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு போன்ற அதன் திட்டங்கள் மீது தமிழகத்தில் கல்வியாளர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020ஐ மத்திய அரசு பல மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தேசிய கல்விக் கொள்கையை பல மொழிகளில் வெளியிட்டிருக்கும் மத்திய அரசு தமிழை புறக்கணித்தது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மேடைப் பேச்சில் திருக்குறளை, பாரதியார் கவிதைகளைக் குறிப்பிட்டு தமிழ் மீது பற்று இருப்பது போல காட்டிக்கொள்வதெல்லாம் வெறும் நாடகமே என்று மத்திய அரசையும் மறைமுகமாக பிரதமர் மோடியையும் சாடியுள்ளார்.
இது குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தேசிய கல்விக் கொள்கையை பல மொழிகளில் வெளியிட்டிருக்கும் மத்திய அரசு தமிழை மட்டும் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல. மேடைப்பேச்சில் திருக்குறளை, பாரதியார் கவிதைகளைக் குறிப்பிட்டு தமிழ் மீது பற்று இருப்பது போல காட்டிக்கொள்வதெல்லாம் வெறும் நாடகமே. நிஜத்தில் தமிழ் நிலத்தின் பண்பாட்டின் மீது படையெடுப்பதும், உரிமைகளை வேரறுப்பதுமே தொடர்கிறது.” என்று மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி பல நிகழ்வுகளில் திருக்குறளையும் மகாகவி பாரதியாரின் கவிதைகளையும் மேற்கோள் காட்டி பேசி வருகிறார். இதனால், கமல்ஹாசன், மத்திய அரசை விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் மறைமுகமாக பிரதமர் மோடியையும் சாடியுள்ளார் என்பது தெரிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”