நாடாளுமன்ற புதிய கட்டிடத்திற்கு, பிரதமர் நரேந்திரமோடி, கடந்த டிசம்பர் 10ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கேலி எழுப்பியுள்ளார்.
கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பதிவில், " சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே...." என்று கமல் தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர், "இந்த புதிய கட்டடம், ‘தற்சார்பு இந்தியா‘ குறிந்த தொலைநோக்குப் பார்வையின் உள்ளார்ந்த அம்சமாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு மக்களின் நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கான வரலாற்றுச்சிறப்புமிக்க வாய்ப்பாகவும் அமைவதுடன், நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடவுள்ள 2022-ம் ஆண்டில், ‘புதிய இந்தியா‘-வின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாகவும் அமையும்" என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் திறனை அதிகரிப்பது மற்றும் அவர்களது பணிக் கலாச்சாரத்தை நவீனப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள், நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் பிரதமர் அடிக்கல் நாட்டு விழாவில் சுட்டிக்காட்டினார்.
உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்குமா?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 81-ன்படி மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் இடங்கள் அம்மாநிலத்தின் மக்கள்தொகையை வைத்து முடிவு செய்யப்படுகின்றன.
1976 வருடம் நிறைவேற்றப்பட்ட 42வது அரசியலமைப்பு திருத்தம் சட்டம், 2001ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 84வது அரசியலைமப்பு சட்டத் திருத்தம் காரணமாக, இந்தியாவில் 1972 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி வரையறை 2026 வரை தொடரவேண்டும் என அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது.
எனவே, 2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின் மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் இடங்கள் அதிகரிக்க வேண்டும். அப்படியானால், 2031 வருடத்திற்குப் பிறகு நடக்கும் முதல் மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் இடங்கள் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும்,அரசியலமைப்பில் மீண்டும் ஒருமுறை திருத்தம் செய்து மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் இடங்களை அதிகரிக்காமலும் செய்யலாம்.